பராசக்தியை பார்த்த ரஜினி போன் பண்ணி சொன்ன வார்த்தை! ஆனால், கமல்ஹாசன்! நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் ஜாலியாக நடைபெற்றது. ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம், வெளியான நாளிலிருந்தே சர்ச்சை, பாராட்டு, வசூல் என அனைத்தையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது. அந்த வெற்றிக் கொண்டாட்ட மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து சொன்ன விஷயத்தை பற்றி பேசி இருந்தார்
பராசக்தி திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், குரு சோமசுந்தரம், சேத்தன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது அவரின் 100வது திரைப்படம் என்பதும் கூடுதல் கவனத்தை பெற்றது.

1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, மாணவர் அரசியலும் சமூக மாற்றமும் எப்படிப் பிரதிபலித்தது என்பதை படமாக்கியுள்ளார் சுதா கொங்கரா. சென்னையில் நடைபெற்ற சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய எஸ்.கே., "ரஜினி சார் நேற்று படம் பார்த்துவிட்டு எனக்கு நேரடியாக போன் செய்தார். 'ரொம்ப போல்டான படம்... இரண்டாம் பாதி சூப்பர், சூப்பர்'ன்னு சொன்னார்" என சொல்ல, அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. டான் படத்திலிருந்து தொடர்ந்து தன் படங்களை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டி வருவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.
ரஜினி மட்டுமல்ல, கமல்ஹாசனும் ரிலீஸுக்கு முன்பே பராசக்தி படத்தை பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். "அமரன் படத்திற்கு இரண்டு நிமிடம் பேசினார். ஆனால் பராசக்தியை பார்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசினார்" என்று கூறி ரசிகர்களை சிரிக்கவும் வைத்தார். நடிகை ராதிகா சரத்குமாரும் "படத்துக்கு படம் மெருகேறி வருகிறீர்கள்" என்று பாராட்டியதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
அதே நேரத்தில், பராசக்தி படம் சர்ச்சைகளிலிருந்தும் தப்பவில்லை. இந்தி திணிப்பு, அரசியல் கருத்துகள், சில காட்சிகள் குறித்து எதிர்ப்புகளும் விவாதங்களும் எழுந்தன. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் படம் கவனிக்கத்தக்க வசூலை பதிவு செய்து வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு தெரிவித்தது. மூன்றாம் நாள் வசூல் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்தாலும், படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சர்ச்சை, வசூல், சூப்பர் ஸ்டார் பாராட்டு என அனைத்தையும் சேர்த்து பார்த்தால், பராசக்தி சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கியமான படமாக மாறியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உற்சாகத்துடன், எஸ்.கே. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இதைவிட ஜாலியான அப்டேட் வேறென்ன வேண்டும்?












Click it and Unblock the Notifications