விஜய் கேரியரையே மாற்றிய ஆர்.பி. செளத்ரி.. ’விசில்’ அடித்து கொண்டாடிய ஜீவா.. அடுத்த நாளே நடந்த சோகம்!
சென்னை: தமிழ் திரைப்பட உலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜீவா அவர்களின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி, இன்று (மே 5) விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் திருப்பத்தை தந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.பி. செளத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ஜீவா, விஜய்யின் தீவிர ரசிகர் என்ற நிலையில், விஜய்யின் வெற்றியை விசில் அடித்து கொண்டாடிய நிலையில், அடுத்த நாளே சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
Super Good Films நிறுவனம் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.பி. செளத்ரி. குறிப்பாக நாட்டாமை, சூரியவம்சம் போன்ற வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர்.

பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி, பல ஹிட் படங்களை வழங்கிய அவரது பங்களிப்பு தமிழ் சினிமாவில் அவருக்கு தனித்த அடையாளத்தை வழங்கியது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் கடுமையாக காயமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது சொந்த ஊரான உதய்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் திரைப்பட ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள விஜயின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஆர்பி சௌத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தோல்வி படங்களையே நடித்து வந்த விஜய்க்கு உரிய பெரிய பிரேக் தேவைப்பட்டது. அப்போது பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் விஜய்யின் கேரியரை மாற்றியவர் ஆர் பி சவுத்ரி.
விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும் படமும் விஜய்க்கு பெரிய பெயரை பெற்று கொடுத்தது. இளைஞர்களை கவர்ந்து வந்த விஜய் அதற்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறியது இந்த திரைப்படங்களின் மூலம் தான்.
கடைசியாக ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஜில்லா படத்தில் விஜய் நடித்திருந்தார். ஆர் பி சவுத்ரியின் மகனும் நடிகருமான ஜீவா, விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஜீவா தனது வீட்டில் விசில் அடித்து விஜயின் வெற்றியை கண்ணீர் மல்க கொண்டாடிய வீடியோ வெளியான நிலையில் அடுத்த நாளே அவருக்கு இப்படி ஒரு சோக செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications