Karuppu movie: சூர்யாவின் கருப்பு படம் ரிலீஸ் ரத்து? தமிழக அரசு அனுமதி கொடுத்தும் பிரச்சனை! தயாரிப்பாளர் உருக்கம்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தை இன்று பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் முன்பதிவு விற்பனையும் மிக வேகமாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு
ஆனால், அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. "தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என்ற ஒரே வரி விளக்கம் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால், படம் முழுமையாக இன்று வெளியாகுமா? அல்லது மேலும் தாமதமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த திடீர் மாற்றத்தால் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பலரும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்களுக்கான பணம் தானாகவே ரீபண்ட் செய்யப்படும் என்று திரையரங்குகள் மற்றும் முன்பதிவு தளங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு படம் ரிலீஸ் ரத்து
சில இடங்களில், "காட்சி ரத்து செய்யப்பட்டதால் உங்கள் பணம் விரைவில் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும்" என தகவல் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், ரீபண்ட் எப்போது கிடைக்கும்? அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரி நடைமுறை இருக்குமா? என்ற சந்தேகங்களும் ரசிகர்களிடம் எழுந்துள்ளன.
முன்னதாக, இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட தனது சமூக வலைதளத்தில், "இந்த படத்துக்கு தொடக்கம் முதலே பல தடைகள் இருந்தாலும், அதை எல்லாம் கடந்து வெளியே வருகிறோம். இந்த முறையும் நல்லதே நடக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகே இந்த காட்சி ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9 மணிக்கு காட்சி ரத்து
கருப்பு திரைப்படம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது. பண சிக்கல்கள், ஓடிடி உரிமை பிரச்சனைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளுடன் வருமான பங்கீடு தொடர்பான விவகாரங்கள் போன்ற பல காரணங்களால் படம் பலமுறை தாமதமாகி வந்தது. இந்த அனைத்து பிரச்சனைகளையும் கடந்து இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் படக்குழுவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி கிடைத்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. பலரும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால், "இன்னும் எத்தனை தடைகள்?", "படம் இன்று வருமா இல்லையா?" என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மீதமுள்ள காட்சிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது முழு வெளியீடும் தள்ளிப்போகுமா என்பது குறித்து தயாரிப்பு தரப்பில் தெளிவான விளக்கம் இன்னும் வெளியாகாததால், கருப்பு திரைப்படத்தின் நிலைமை குறித்து இன்னும் குழப்பமே நீடித்து வருகிறது.













Click it and Unblock the Notifications