Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வதேச மக்களாட்சி நாள்

Subscribe to Oneindia Tamil

International Day of Democracy
ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு சுதந்திரம் இருத்தல் மற்றைய பிரதான பண்பாகும். எவ்வாறாயினும் ஒருவரது சுதந்திரத்தால் இன்னொருவர் சுதந்திரம் பாதிப்படையதல் கூடாது. சுதந்திரத்தைப் பிரதானமாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சமய சுதந்திரம்

அரசியல் சுதந்திரம் எனும் போது புராதன கிரேக்க ஆட்சிகளைப் போல இன்று நேரடியான மக்களாட்சி முறையைக் காணமுடியாது. எனவே இன்று காலத்திற்குக் காலம் நடைபெறும் தேர்தல்கள் மூலம் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தமக்கு விருப்பமான அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கு மக்கள் உரிமை பெற்றுள்ளனர். இது மக்களாட்சி முறையின் மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். எனவேதான் மக்களாட்சியில் அரசியல் சுதந்திரம் முக்கிய இடத்தை விக்கின்றது.

இத்தேர்தல்களில் தமது பிரதிநிதிகளைச் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்து கொள்வதற்குப் பொதுமக்களுக்கு உரிமையுண்டு. தேர்தல் காலங்களில் துண்டுப்பிரசுரங்களை வெளியிடவும், கருத்துக்களைக் கூறவும், அரசியல் கூட்டங்களை நடத்தவும் சுதந்திரம் காணப்படும். தேர்தலின்போது அரசியல் கட்சிகள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கேற்ப (தாம் பதவிக்கு வந்தால் தமது ஆட்சியின்போது எம்முறைகளைப் பின்பற்றுவோம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த முன்வைக்கும் திட்டம் தேர்தல் விஞ்ஞாபனமாகும்) மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் சுதந்திரம் காணப்படல் வேண்டும்.

ஜனநாயகம் எனப்படுவது பெரும்பான்மைக் கருத்தின்படி செயற்படும் ஓர் ஆட்சி முறையாகும். சர்வசன வாக்குரிமைப்படி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தைப் பெற்ற கட்சி அரசாங்கக் கட்சியாகும். அரசாங்கக் கட்சி பெற்ற விருப்பத்தைவிடக் குறைவான விருப்பத்தைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகள் எதிர்க்கட்சிகள் எனப்படும். அரசாங்கக் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறான கருத்துக்களை சகிக்கும் பண்பு அக்கருத்துக்கள் பற்றிச் சிந்தித்தல் ஆகியன ஜனநாயக நாட்டுக்கு முக்கிய பண்புகளாகும்.

அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சியின் கருத்துக்களைச் செவிமடுப்பதைப் போலவே எதிர்க்கட்சியும் பயனுறுதி வாய்ந்த கருத்துக்களையே முன் வைக்க வேண்டும். அரசாங்கக் கட்சியின் சகல திட்டங்களையும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சியின் கடமையாக இருத்தல் கூடாது. மக்களாட்சியில் தீர்மானங்கள் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றனவாயின் மற்றவர்களுடைய கருத்துக்கள், அபிப்பிராயங்கள் முதலியவற்றைச் செவிமடுத்துக் கவனித்துச் செயற்படுதல் அரசாங்கக் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் கடப்பாடாகும்.

பொருளாதாரச் சுதந்திரம் எனும் போது நாட்டின் சட்டங்களுக்கு அமையவும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் தாம் விரும்பிய எந்தவொரு தொழிலைச் செய்யவும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எவருக்கும் சுதந்திரம் உண்டு. உழைப்புக்கேற்ற ஊதியம் தொழிற் பாதுகாப்பு என்பனவும் இங்கு வழங்கப்படல் வேண்டும். தனிப்பட்ட சொத்துக்களையும் பணத்தைச் சேமிக்கவும் குடியாட்சியில் மக்களுக்கு சுதந்திரமுண்டு. (ஆனால், இவை ஏனையவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் இருத்தல் வேண்டும்) சமய சுதந்திரம் எனும் போது விரும்பிய சமயத்தைப் பின்பற்றவும் பிரசாரம் செய்யவும் போதிக்கவும் குடிகளுக்கு சுதந்திரம் உண்டு.

மேற்குறித்த விடயங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் உறுதிப்படுத்தப் பட்டிருத்தல் வேண்டும். ஆனால் நவீன யுகத்தில் பெரும்பாலான நாடுகளில் இவை எழுத்தளவிலும் மேடைப் பேச்சளவிலும் மாத்திரமே உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை அவதானிக்கின்றோம்.குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இப்போக்கினை சிறப்பாக அவதானிக்கலாம். இந்த நிலையே ஜனநாயகத்திற்கு எதிரான குறைபாடாகவும் சுட்டிக் காட்டப்படகின்றது.

ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு தேவையான நிலைமைகளாகப் பின்வருவனவற்றை அவதானிக்கலாம். மக்களிடையே மிக உயர்ந்த அளவில் நேர்மையும் பரஸ்பர மரியாதையும் இருத்தல் வேண்டும். மக்கள் தங்களுக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவராகக் கருத்தப்படல் வேண்டும். பெரும்பாலானோரின் கருத்துக்களை ஏற்பதோடு சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும்.

மக்கள் முழுச் சமுதாயத்தினதும் நலனில் அக்கறை காட்டுதல் வேண்டும். உறுதியானதும் ஆற்றலுடையதுமான பொதுசன அபிப்பிராயம் நிலவுதல் வேண்டும். பூரண அரசியல் சுதந்திரம் இருத்தல் வேண்டும்

வளர்ச்சியடைந்ததொரு பொருளாதாரம் ஜனநாயகத்தின் செயற்பாட்டுக்கு அவசியமான மற்றுமொரு அம்சமாகும். நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவுதல் அவசியம், சிறப்பான தலைமைத்துவம் அமைதல் வேண்டும். ஒப்பீட்டு அளவில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஜனநாயம் சிறப்பாக இருப்பதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாக அமையலாம்.

அதே நேரம் ஜனநாயகம் தோல்வியடைவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை கோட்பாட்டு ரீதியாக குறிப்பிடலாம்.

பாரம்பரிய அரசியற் சட்ட அமைப்பினுள் பயன்தரும் அரசியற் தலைமை உருவாகும் ஆற்றலின்மை, பலவீனமுள்ள நிர்வாக அதிகாரிகளுக்கெதிரான எதிர்ச் செயல்கள், கடுமையான பொருளாதார இடர்பாடுகள் - உதாரணம் (வேலையில்லாப் பிரச்சினை, அடிப்படை விடயங்களில் உடன்பாடின்மை, பொது விவகாரங்களில் மக்கள் அக்கறை காட்டாதிருத்தல், ஜனநாயகத்திற்கு அவசியமான நன்கு வளர்ச்சியடைந்த பாரம்பரியங்கள் இல்லாதிருத்தல் முக்களிடையே ஒழுக்கக்கேடும், பயனற்ற தன்மை பற்றிய உணர்ச்சியும் நம்பிக்கை இழந்த நிலையும் காணப்படுதல் போன்ற காரணிகளை இனங்காட்டலாம்.பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் விமர்சனங்களுக்கு உற்பட மேற்குறிப்பிட்ட காரணிகளும் ஏதுவாகின்றன.

எவ்வாறாயினும் ஜனநாயம் என்பது கோட்பாட்டு ரீதியில் மிகவும் உயர்வானது. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்களாலும் மக்களின் அறிவீனம் காரணமாகவும் அது விமர்சனங்களுக்கு உற்படுவதை தவிர்க்க முடியாது உள்ளது. உலகளாவிய ரீதியில் 2009 ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது இரண்டாவது 'சர்வதேச மக்களாட்சி நாள்" இத்தினத்தில் ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் தீவிரமாக விதைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+