ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. புதிய பயனாளர்களுக்கு அரியர் தொகையுடன் வழங்கும் அரசு? உண்மை என்ன?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மேல் முறையீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இம்மாதம் முதல் ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிமைத் தொகை முதன் முதலாக வழங்கப்பட்ட மாதத்திலிருந்து இப்போது வரை சேர்த்து அரியர் தொகையாக நிதி விடுவிக்கப்படுகிறது என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் என்றால் இரண்டாம் தர குடிமக்களாகவே இன்றும் இந்த சமூகம் கருதுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை இச்சமூகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள ஏராளமான போராட்டங்களை எதிர்கொள்கிறாள். ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு இயல்பாக கிடைப்பதில்லை. வீட்டிலும் வேலை செய்துவிட்டு வெளியிலும் சென்று தன்னை நிரூபிக்க அவர்கள் இரண்டு மடங்கு உழைப்பை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும், கருத்தியல் போர்களும் தற்போது அவர்களின் நிலையை மாற்ற தொடங்கியுள்ளது.

குறிப்பாக வீட்டில் குடும்பத்திற்காக தனது முழு வாழ்க்கையையும் அற்றப்பணிக்கும் பெண்களை பற்றி இந்த சமூகம் விரிவாக பேச தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுதான் குடும்ப பெண்களுக்கான ஊதியம். நாங்களும் வேலைதான் செய்கிறோம். ஆனால் அது மட்டும் கணக்கில் கொள்ளப்படுவதே கிடையாது என்று கூறிய அவர்கள், தங்களுக்கான ஊதியத்தை கேட்க தொடங்கியுள்ளனர். இதை முற்போக்கு இயக்கங்கள்/கட்சிகள் வரவேற்று ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமை தொகை செலுத்தப்பட்டது.
மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. உரிமை தொகை பெற தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலரும் விமர்சனங்களை எழுப்பினர். இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக 2023 நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர மேலும் 11.85 லட்சம் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்திருந்துள்ளனர். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 15ம் தேதி முதல் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என கூறியிருந்தார்.
அதேபோல கடந்த 15ம் தேதி கூடுதலாக 1.48 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை விடுவிக்கப்பட்டது. இருப்பினும், முதன் முதலாக உரிமைத் தொகை வழங்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரை சேர்த்து அரியர் தொகையாக நிதி விடுவிக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த 1.48 குடும்பத் தலைவிகளுக்கு அரிய தொகையுடன் சேர்த்து உரிமைத் தொகை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முடிவு
அரியர் தொகையுடன் சேர்த்து உரிமைத் தொகை வராது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய பயனாளர்களுக்கு இந்த மாதத்திலிருந்து உரிமைத்தொகை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications