“விஜய் ப்ரோ.. வெரி ராங் ப்ரோ”- காவிரி விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்த அதிமுக எம்.பி
சென்னை: "மேகதாது விவகாரத்திற்காக புதிய தீர்ப்பாயம் கோருவது சட்டரீதியாக தேவையற்றதோடு, ஏற்கனவே உள்ள சட்டக் கட்டமைப்பின் வலிமையையே பலவீனப்படுத்தும் செயல். அதிமுக பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட காவிரி உரிமையை, பலவீனப்படுத்தாதீர்கள்" என அதிமுக ராஜ்யசபா எம்.பி இன்பதுரை வலியுறுத்தி உள்ளார்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் அறிக்கையை ஏற்றுவிட்டால் அது பிரச்சனையாகிவிடும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பதிலாக அணை கட்டுவதற்கு எதிராக புதிய நடுவர் மன்றம் அமைவது அவசியம். புதிய ஆணையம் அமைய ஓராண்டு வரை காலம் ஆகும். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நமக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் என சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.

மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கீழ்ப்படுகை மாநிலங்களின் அனுமதி இல்லாமல், மேல் படுகை மாநிலம் காவிரி நீரை தடுக்கவோ, தேக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டனர். அப்படியிருக்கையில் மீண்டும் நடுவர் மன்றம் கேட்கும் தீர்மானத்தை ஏன் கொண்டுவந்தார்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், அதிமுக ராஜ்யசபா எம்.பி இன்பதுரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் விஜய் Bro, it's very wrong, bro!
ISRWD Act, 1956-ன் பிரிவு 6(2)-ன்படி காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற ஆணைக்கு நிகரான சட்ட வலிமையைக் கொண்டது. மேலும், உச்சநீதிமன்றமும் அதனை உறுதிப்படுத்தி, அமலாக்கத்திற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.
தீர்ப்பாயத்தின் Award Clause XI-ன்படி கீழ்நிலை மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்ட நீர்வரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேல்நிலை மாநிலம் மேற்கொள்ள முடியாது. இதனை கண்காணித்து அமல்படுத்துவதற்காகவே சட்டப்பிரிவு 6A-ன் கீழ் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவேரி தீர்ப்பாயத் தீர்ப்பு மற்றும் CWMA ஆகிய மூன்று வலுவான சட்டப் பாதுகாப்புகளும் தமிழ்நாட்டின் கையில் இருக்கும் போது, அவற்றை முழு வலிமையுடன் பயன்படுத்தாமல் மேகதாது விவகாரத்திற்காக புதிய தீர்ப்பாயம் கோருவது சட்டரீதியாக தேவையற்றதோடு, ஏற்கனவே உள்ள சட்டக் கட்டமைப்பின் வலிமையையே பலவீனப்படுத்தும் செயலாகும்.
இறுதி செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு விவகாரத்தை மீண்டும் திறக்க முயல்வது, நீதித் தீர்ப்புகளின் இறுதித்தன்மை என்ற அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும். திமுகவின் ஆலோசனையை ஏற்று, தவெக அரசு புதிய தீர்ப்பாயம் அமைக்க கோருவது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம்!
ஜெயலலிதாவும், அதிமுக இயக்கமும் பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி மீட்ட காவிரி உரிமையை, அலட்சியத்தாலும் - தவறான அரசியல் அணுகுமுறையாலும் பலவீனப்படுத்தாதீர்கள்! விஜய் Bro, it's very wrong, bro!" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications