“அதிமுகவில் இருந்து தவெக செல்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள்”.. ஜான் பாண்டியன் காட்டம்!
சென்னை: "அதிமுகவில் இருந்து தவெக செல்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள், அவர்களை சேர்த்தால் அழிவுதான் ஏற்படும். கடந்த தேர்தலில் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, நாங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போல இருந்தது தவறுதான். எங்களுக்கு சீட்டு கொடுக்காத பலனை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் எனத் தெரிகிறது" என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அடுத்து யாருடன் கூட்டணி என்பதை பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிப்போம் என்றும் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் ஜான் பாண்டியன் பேசுகையில், "நாங்கள் இவ்வளவு நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவோடு நல்ல நட்புறவோடு கூட்டணி அமைத்தோம். இன்றிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது. நட்பு தொடருமே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இல்லை என்ற செய்தியை நான் சொல்லிக் கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற காலகட்டத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய தேவைகள், சேவைகள் அதிகமாக இருக்கின்ற காலகட்டத்தில், அதிலே பணி சிறக்க நாங்கள் செயல்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறி இருக்கிறோம்.
இப்போது வெளியேறுகிறோமே தவிர, அந்த காலகட்டம்... தேர்தல் காலகட்டத்தில் யாரோடு இணைய வேண்டும், யாரோடு பயணிக்க வேண்டும் என்ற செய்தியைப் பொதுக்குழு கூட்டி, முடிவெடுத்து உங்களிடத்திலே தெரிவிப்போம். தேர்தல் என்பதே தேர்தல் காலத்தில் சந்தர்ப்பவாதக் கூட்டணி தானே... கூட்டணியில் நிரந்தரமான கூட்டணி கிடையாது இல்லையா? நாங்கள் இப்போது என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியில் போறோம், அவ்வளவுதான். நட்பு தொடரும், நட்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால், கூட்டணி என்பது தேர்தல் காலகட்டத்தில் அமைக்கப்படுவது ஒன்றுதான். அந்த தேர்தல் காலகட்டம் முடிந்துட்டு வெளியில் போயிட்டோம், அவ்வளவுதான்.
அதிமுகவில் இருந்து தவெக செல்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள், அவர்களை சேர்த்தால் அழிவுதான் ஏற்படும். கடந்த தேர்தலில் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, நாங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போல இருந்தது தவறுதான். எங்களுக்கு சீட்டு கொடுக்காத பலனை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் எனத் தெரிகிறது.
நிர்வாகிகளுடைய ஒப்புதலின் அடிப்படையில், மாநிலச் செயற்குழு ஒப்புதலின் அடிப்படையில்... வருகிற காலகட்டத்தில் தேர்தல் காலகட்டத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்ற செய்திகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அதனால, இப்ப நாங்க வெளியில போறோம். தேர்தல் காலகட்டத்தைப் பொறுத்து, சூழ்நிலையைப் பொறுத்து, அந்த காலகட்டத்தில் தான் பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும். இப்ப சொல்ல முடியாது.
ஆட்சி அமைச்சதற்கு, மக்களுடைய தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நல்லாட்சி தரவேண்டும் என்று சொல்லி நாங்களும் விரும்புகிறோம், மக்களும் விரும்புகிறார்கள். ஒரு மாத காலம் தான் ஆயிருக்கிறது, அதனால இப்போது முடிவு சொல்ல முடியாது. இன்னும் காலப்போக்கில் அவர்கள் எப்படி ஆளுகின்றார்கள் என்பதைப் பார்த்துத்தான் நாங்கள் முடிவு சொல்ல முடியும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications