தூய்மைப் பணியாளர்கள் போராடும்போது ஆதரித்த தவெக இப்போது தனியார்மயப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கொதிப்பு
சென்னை: "தேர்தலுக்கு முன்பு சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராடும் போது, ஆதரித்த தவெக, தற்போது 12 மாநகராட்சிகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணியையும் தனியார் மயமாக்க முயல்வது முற்றிலும் நியாயமற்றது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூய்மை பணிகளை பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர் ஆகிய 12 மாநகராட்சிகளில் இதை செயல்படுத்த ரூ.4.05 கோடி மதிப்பில் டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கும் நிலையில், தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தூய்மைப் பணி தனியார்மய முயற்சியை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. இது தனியார்மயத்தை நோக்கிய முதல் படியாகும்.
தூய்மைப்பணி தனியார்மய முயற்சிகளில் இதுவே தீவிரமான நடவடிக்கையாகும். அவ்வப்போது தனியார்மய முயற்சிகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்வதும், ஊழியர்கள் போராடி தடுப்பதும், தள்ளிப்போடுவதும் கடந்த கால அனுபவமாக இருந்திருக்கிறது. தொழிலாளிகள் ஓய்வு பெற்றால் அந்த இடங்களை வெளிமுகமை வைத்து நிரப்புவது என்று அரசாணை வெளியிடப்பட்டதும் மாநகராட்சியின் சில வார்டுகள், மண்டலங்களில் தனியார்மயம் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், 12 மாநகராட்சி தூய்மைப்பணி ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கும் செயலாக இது உள்ளது. தேர்தலுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர்கள் போராடும் போது தவெக அதை ஆதரித்திருக்கிறது. இந்தப் பின்னணியில், இந்த தனியார்மய முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும். ஏழை மற்றும் அடிமட்ட குடும்பங்கள் நிரந்தர வருவாய் ஈட்ட ஈடுபடும் இந்தத் தொழிலை தனியார்மயமாக்குவது பொருத்தமற்றது.
எனவே, தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications