ஐடி ஊழியர்கள் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்.. ஹைதராபாத்தில் வரும் புதிய ரூல்ஸ்.. இது நல்லா இருக்கே
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் இப்போது நாட்டில் முக்கிய ஐடி ஹப்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் அங்கு பல லட்சம் பேர் வேலை செய்யும் நிலையில், இதனால் அங்கு டிராபிக் நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் தெலுங்கானா அரசு இந்த விவகாரத்தில் முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஹைதராபாத்திலும் கூட கிட்டத்தட்ட பெங்களூருக்கு சவால் விடுக்கும் வகையில் சில பகுதிகளில் டிராபிக் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக முக்கிய ஐடி மையங்களான ஹைடெக் சிட்டி, பைனான்ஷியல் டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் தான் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தெலுங்கானா அரசு இப்போது புதிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மழைக்காலம்
ஹைதராபாத்தில் சீக்கிரமே மழைக்காலம் ஆரம்பிக்கும் சூழலில்.. லேசாக மழை பெய்தாலே சாலைகளில் நீர் தேங்குவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் சரியாக அலுவலகம் செல்ல முடியாமல் பலரும் சிரமப்படுகிறார்கள். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஐடி ஊழியர்கள் பல மணி நேரம் சாலைகளில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகி வருகிறது.
முன்கூட்டியே கிளம்பலாம்
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சைபராபாத் பாதுகாப்பு கவுன்சில், சைபராபாத் போலீசார் மற்றும் ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் எல்லா பெரிய ஐடி நிறுவனங்களில் ஊழியர்களும் ஒரே நேரத்தில் வெளியேறுவது தான் டிராபிக்கை உருவாக்குகிறது. இதனால் ஊழியர்கள் ஆபீஸை விட்டு வெளியே வரும் நேரத்தை 10 நிமிட இடைவெளியில் மாற்றி அமைக்கலாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு வளாகத்தில் இருக்கும் ஐடி ஊழியர்கள் மாலை 5.30க்கு கிளம்புகிறார்கள் என்றால் அதே ஏரியாவில் இருக்கும் மற்றொரு வளாகத்தில் இருப்போர் 5.40 அல்லது 5.45க்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்பதே அவர்கள் பரிந்துரை. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் சாலைகளில் குவிவது தடுத்து நிறுத்தப்படும்.
டைமிங்
கொரோனா காலத்திற்கு பிறகு பல ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் வேலை முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக மாலை நேரத்தில் உச்சக்கட்ட டிராபிக் பாதிப்பு ஏற்படுவது சற்று குறைந்திருந்தாலும், இப்போது மாலை 4.30 மணியிலிருந்தே ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேற தொடங்குவதால் அப்போதே ஐடி ஹப் ஏரியாக்களில் டிராபிக் அதிகரித்துள்ளன. அதை எல்லாம் கருத்தில் கொண்டே அலுவலகத்தில் இருந்து வெளியேற வரும் டைமிங்கை மாற்ற யோசித்து வருகிறார்கள். இருப்பினும், இது தொடர்பான கட்டாய உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று ஐடி நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது டைமிங்க்கை ஸ்ட்ரிட்டாக பார்ப்பதில்லை. மழை, போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களது வருகை மற்றும் புறப்படும் நேரங்களை மாற்றிக் கொள்ளலாம். இதை மேலும் ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கார் ஷேரிங்
அதேபோல போக்குவரத்து நெரிசலை குறைக்கும் மற்றொரு முயற்சியாக கார் ஷேரிங் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இதற்காக செயலியை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த செயலியில் புக் செய்து கார் ஷேரிங் செய்வதே இதன் நோக்கமாகும்! இப்போது டிராபிக் எங்கு அதிகம், எந்த சாலைகளை தவிர்க்கலாம். மாற்று வழிகள் என்ன, மழை எச்சரிக்கை ஆகியவை உடனடியாக மக்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்புவது குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகிறது.
பலன் தருமா?
ஹைதராபாத்தில் அதிக ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள சைபராபாத் பகுதியில் ஏற்கனவே பல AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் போக்குவரத்தை நேரடியாக கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஹைதராபாத் ஐடி மையங்களில் அதிகரித்து வரும் டிராபிக்கை சவால்களை சமாளிக்க இப்படி மாநில அரசு, போலீசார் மற்றும் ஐடி நிறுவனங்கள் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எந்தளவுக்கு பலன் கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!















Click it and Unblock the Notifications