சவுமியா அன்புமணி போட்ட "கயிறு" கணக்கு! பயிர்க்கடன் தள்ளுபடி பாயிண்ட்டை பிடித்து கேட்ட கேள்வி
சென்னை: விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தான் தமிழக அரசியலில் இப்போது டாப் டாப்பிக்.. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி என்ன, இப்போது நடப்பது என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களோடு பேசிய பேச்சு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்படியென்ன பேசினார் தெரியுமா?
கடந்த மே 25, 2026 அன்று முதல்வர் விஜய் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை வந்தது.

பயிர்க்கடன் தள்ளுபடி
ஆனால் அதில் ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது, கடந்த 01 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை, வெறும் 10 மாதங்களில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும்தான் இந்தத் திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டது.
அதிலும் ரூ. 50,000 வரை கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு மட்டும்தான் முழு தள்ளுபடி என்றும், சிறு விவசாயிகளுக்கு அதில் பாதித் தொகை மட்டுமே தள்ளுபடி என்றும், மற்ற இதர விவசாயிகளுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் வெறும் ரூ. 5,000 மட்டும்தான் தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை
இந்த அறிவிப்பு வந்ததும் விவசாயிகளிடம் அதிருப்தி ஏற்பட்டது.. ஆட்சிக்கு வந்தால் முழு கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லிவிட்டு, இப்படி கண்டிஷன் போடுகிறீர்களே என போராட்டங்களும் வெடித்தன. விவசாயிகளின் இந்த புலம்பலையடுத்து, ஜூன் 15 அன்று முதல்வர் விஜய் தலைமையில் அவசர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பிறகு ஜூன் 17 அன்று புதிய திருத்தப்பட்ட அதிரடி அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிட்டார். அதன்படி, ரூ. 75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு இப்போது முழு கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75,000-க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு ரூ. 30,000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,000 கோடி வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், அரசுக்கு கூடுதலாக ரூ. 5,932 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சவுமியா அன்புமணி காட்டம்
ஆனால், தேர்தல் வாக்குறுதியில் முழுமையாக தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, இப்போது என்ன தவணை முறையில் மாற்றி மாற்றி அறிவிக்கிறீர்களே என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.. இந்த கேள்வியைதான் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி இன்று சட்டப்பேரவையில் மீண்டும் எழுப்பியிருக்கிறார்..
"பாட்டாளி மக்கள் கட்சியில் நாங்கள் விவசாயிகளை எங்களுக்கு உணவளிக்கும் கடவுளாகவே பார்க்கிறோம்.. காரணம், வெயில் என்றும் மழை என்றும் பாராமல் தங்களுடைய உழைப்பைத் தரக்கூடியவர்கள் அவர்கள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையே, மழைக்காலத்தின் போது அவர்கள் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி வீணாவதுதான்.
கயிறு கணக்கு
இப்படிப் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிடும் போது, அரசாங்கம் உடனடியாக நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது கிடையாது. 2 நாட்கள் கழித்து, வயலில் இருக்கும் தண்ணீர் வடிந்த பிறகு ட்ரோன் மூலம் ஆய்வு செய்கிறீர்கள். அப்படி செய்யும்போது வயலில் எப்படி தண்ணீர் இருக்கும்? அதை வைத்துக்கொண்டு, இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று அரசாங்கம் தவறான கணக்கைக் காட்டிவிடுகிறது.
எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து அறுவடை செய்த பிறகு, நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கேயும் அவர்களுக்கு நிம்மதி இல்லை. ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். மீதமுள்ள மூட்டைகள் அங்கேயே தேங்கி, மழையிலும் வெயிலிலும் கிடந்து வீணாகிவிடுகின்றன. இப்படி எத்தனையோ துயரங்களை சமாளித்துத்தான் நம் நாட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த இழப்புகளை சமாளிக்க முடியாமல், அவர்கள் பல்வேறு வங்கிகளிலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால், கடந்த 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அப்படியானால் தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?
100 அடி கிணறும், 50 அடி கயிறும்
சூழ்நிலை இப்படி இருக்கும்போது, சமீபத்தில் இந்த அரசு விவசாயிகளுக்குப் பயிர்க்கடனில் 50 விழுக்காடு மட்டுமே தள்ளுபடி என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு, நீங்கள் வெறும் 50 அடி நீளமுள்ள கயிற்றை மட்டும் தூக்கிப் போட்டால் அது எப்படி நியாயம்? அந்த அரைகுறைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அவரால் எப்படி மேலே வர முடியும்? அவருக்கு முழுமையான கயிற்றைக் கொடுத்தால்தானே, அதைப் பிடித்து அவரால் முழுமையாக வெளியே வர முடியும்!
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
அதேபோலத்தான் இந்தத் திட்டமும் அமைந்துள்ளது. விவசாயிகளின் பயிர்க்கடனை இந்த அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை அரசாங்கத்தின் செலவாகக் கருத வேண்டாம், அதனை அவர்களின் "வாழ்வாதாரமாக" கருதி முழுமையான கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.
ஒரு அறையை சிறு ஒளி நிரப்பி விடுவதைப்போல் ஆளுநர் உரையில் இருந்த சமூக நீதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு இருந்தது., மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் வேலை செய்பவர்கள் வேளாண் மக்கள்... பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதை செலவாக பார்க்காதீர்கள். விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications