கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி! எப்படி நடந்தது?
தோஹா: கத்தாரின் ராஸ் லஃபான் எல்என்ஜி (LNG) வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 66 பேர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரில் இந்தியர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தாரின் முக்கிய எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமான ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள பார்சான் எரிவாயு விநியோக நிலையத்தில் இன்று மாலை இந்த பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

13 பேர் உயிரிழப்பு
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 66 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களுள் இந்தியர்களும் அடங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை.
ஈரான் - அமெரிக்கா போர் உச்சத்தில் இருந்த போது, கத்தாரில் உள்ள இந்த இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சேதம் எற்பட்டதையடுத்து, இந்த ஆலை செயல்பாடுகளை நிறுத்தியது. தற்போது மத்திய கிழக்கில் போர் பதற்றம் சற்று தணிந்து இருக்கும் சூழலில், உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்திய தூதரகம் அறிக்கை
ஈரான் போரின் தாக்கத்தால் வளைகுடா நாடுகளின் எரிசக்தி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உற்பத்தியை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கத்தார் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "ராஸ் லஃபான் தொழிற்நகரில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறோம். அதிகாரிகள் அளித்த தகவலின்படி, பலர் காயமடைந்துள்ளனர்; சிலர் மாயமானவர்களாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
70 கிமீ தூரம் உணரப்பட்டது
இந்த வெடிவிபத்தின் தாக்கம் ராஸ் லஃபான் தொழிற்சாலையிலிருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ள மத்திய தோஹா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் அதிர்ந்ததுடன், பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் ஏற்பட்டது. கத்தாரின் எல்என்ஜி தொழில்துறையின் மையமாக ராஸ் லஃபான் நகரம் விளங்குகிறது. ஆண்டுக்கு 7.7 கோடி மெட்ரிக் டன் (77 மில்லியன் மெட்ரிக் டன்) எல்என்ஜி உற்பத்தி செய்யும் திறன் இந்த வளாகத்திற்கு உள்ளது.
இது உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகும். கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளங்களில் ஒன்று அமைந்துள்ளது. இதனால், போரின் போது பலமுறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் மேற்கொண்டது. ஈரானின் இந்த தாக்குதலில் கத்தாரில் கணிசமான அளவு சேதமும் ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications