Fact Check: மோடியை வரவேற்க விமான நிலையம் வராத புதின்.. சீன அதிபரை வரவேற்க வந்தாரா? உண்மை இதுதான்
சென்னை: சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றிருந்தார். இந்நிலையில், சீன அதிபர் ரஷ்யா சென்றிருந்த போது அவரை அழைக்க ரஷ்ய அதிபர் விமான நிலையம் வந்திருந்ததாகவும், ஆனால் மோடி சென்றபோது புதின் வரவில்லை என்றும் சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய - ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 8,9 தேதிகளில் ரஷ்யாவில் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜூலை 8ம் தேதி மோடி மாஸ்கோ சென்றடைந்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்படி இருக்கையில். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரில் உயிரிழக்கும் குழந்தைகள் குறித்து மோடி கவலை தெரிவித்திருக்கிறார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மோடி ரஷ்யா செல்வது இதுவே முதல்முறை.
இந்த சந்திப்பில், ரஷ்யா ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், "அமைதியை நிலைநாட்ட அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது. அமைதி குறித்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளை புடினுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்று உங்களுக்கும் உலக சமூகத்திற்கும் உறுதியளிக்கிறேன். வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது" என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், "ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது. பேச்சுவார்த்தையால் மட்டுமே அது சாத்தியம். அமைதியை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்கும். அமைதியை மீட்டெடுப்பதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.
இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது என்பதை நான் உங்களுக்கும் உலக சமூகத்துக்கும் உறுதியளிக்கிறேன். புதிய தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற, அமைதிப் பேச்சுகள் தேவை. மாறாக வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்காது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதலால் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நான் கண்டிக்கிறேன்" என்று பிரதமர் கூறியிருந்தார்.
சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளின் சந்திப்பு உலக அளவில் பேசுபொருளாகியிருந்தது. இப்படி இருக்கையில் மற்றொருபுறம் இந்த விவகாரத்தை பலர் வேறு விதமாக விவாதமாக கிளப்பியிருந்தனர். அதாவது பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி, மோடி ரஷ்யாவுக்கு சென்றிருந்த போது அவரை விமான நிலையத்தில் வரவேற்க புதின் வரவில்லை என்றும், ஆனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங்-ஐ அழைக்க புதின் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார் என x தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து தற்போது உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சீன அதிபர் ரஷ்யா வந்தபோது அவரை வரவேற்க புதின் செல்லவில்லை என்பதுதான் இந்த உண்மை. இதனை இந்தியா டுடே தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது கார்டியன் செய்தி ஊடகம் சீன அதிபர் ரஷ்யாவுக்கு வந்த செய்தியை வீடியோவாக கவர் செய்து வெளியிட்டிருக்கிறது. அதில் புதின் இல்லை. இதன் மூலம் சீன அதிபரை வரவேற்கவும் புதின் விமான நிலையத்திற்கு வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றபோது விமான நிலையத்தில் அவரை வரவேற்க புதின் வரவில்லை. ஆனால், சீன அதிபரை வரவேற்க புதின் விமான நிலையம் வந்திருந்தார்.
முடிவு
சீன அதிபர் ரஷ்யா வந்திருந்த போதும் புதின் அவரை வரவேற்க விமான நிலையம் வரவில்லை. இதனை கார்டியன் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications