Fact Check: மணிப்பூரில் ராகுலுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பினார்களா? பரவும் வீடியோ.. உண்மை என்ன?
இம்பால்: சமீபத்தில் மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றிருந்தார். இந்த பயணத்தின்போது மணிப்பூர் மக்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்த உண்மை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சமீப நாட்களா மணிப்பூர் குறித்த விவாதங்கள் அதிகமாக எழுந்து வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். இந்த பயணத்தை மேற்கோள் காட்டி, சொந்த நாட்டில் கலவரம் நடந்த மணிப்பூருக்கு போகாமல் பிரதமர் ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை அடுக்கியிருந்தன.

"பிரதமர் மோடி ரஷ்யா செல்லும் வேளையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அசாம் மற்றும் மணிப்பூருக்கு சென்றுள்ளார். பிரதமர் உக்ரைன்-ரஷ்யா போரைதான் நிறுத்த அங்கு செல்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லக்கூடும். ஆனால், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தததற்கு பிறகு, அங்கு செல்ல பிரமர் மோடிக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. அம்மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்களைக்கூட அவர் சந்திக்கவில்லை.
பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு இப்போது வரை மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லையா?" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்தார்.
மறுபுறம் மணிப்பூர் சென்றிருந்த ராகுல் காந்தி, "மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் இங்கு வருவது இது மூன்றாவது முறை துரதிருஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டாக பிரிந்துள்ளது. வீடுகள் எரிகின்றன, அப்பாவி மக்களின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மணிப்பூருக்கு செல்ல வேண்டும். மக்களின் துயரங்களைக் கேட்டு, மாநிலத்தில் அமைதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் மணிப்பூரில் அமைதிக்கான தேவை குறித்து முழு பலத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மணிப்பூருக்கு சென்றிருந்த போது அவரை அம்மாநில மக்கள் புறக்கணித்தனர் என்று வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் இது உண்மையில்லை என தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை மேற்கொண்டிருந்தார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அங்கு பாஜக ஆதரவாளர்கள் இவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியிருந்தனர். இது பெரும் விவாதமாக வெடித்தது. இந்த வீடியோவை ANI செய்தி ஊடகம் ஜனவரி 21ம் தேதி இரவு 8.49 மணியளவில் x தளத்தில் பதிவிட்டிருக்கிறது.
இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு, "மணிப்பூர் சென்ற ராகுல் காந்திக்கு அம்மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்" என்று சுற்றிக்கொண்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
மணிப்பூர் சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 'Go Back Rahul Gandhi' என முழக்கமிட்டுள்ளனர்.
முடிவு
'Go Back Rahul Gandhi' என முழக்கமிட்டதாக சொல்லப்படும் வீடியோவை கடந்த ஜனவரி 21ம் தேதி ANI செய்தி ஊடகம், அசாம் மாநிலத்தில் நடந்ததாக x தளத்தில் பதிவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications