சிபிஐக்கு மாறியதும்.. இரவோடு இரவாக கரூர் நெரிசல் ஏற்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டதா? உண்மை என்ன
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 21 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கு சிபிஐக்கு மாறியது கரூர் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்தினை இரவோடு இரவாக அதிகாரிகள் சுத்தம் செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பெண்கள், குழந்தைகள் என விஜய்யை பார்க்க வந்திருந்த 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது. அருணா ஜெகதீசனும் மறுநாள் காலையில் விசாரணையை தொடங்கினார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
எஸ்.ஐ.டி ஒரு புறம் விசாரணையை தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இரவோடு இரவாக சுத்தம் செய்வதாக
மேலும் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை, எஸ்.ஐ.டி விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த சூழலில் நேற்று இரவோடு இரவாக கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தினை அதிகாரிகள் சுத்தம் செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. அதாவது வழக்கு சிபிஐக்கு மாறிய நிலையில் அரசு சார்பில் தடயங்களை அழிப்பதற்காக இந்த இப்படி சுத்தம் செய்யப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடம் இரவோடு இரவாக சுத்தம் செய்வதாகப் பரவும் வதந்தி.. கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மாநகராட்சி தரப்பிலோ, நெடுஞ்சாலைத்துறை தரப்பிலோ இதுபோன்று எந்தப் பணியும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை.
காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த வாரமே அங்கு கிடந்த காலணிகள் அகற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்" என்று கரூர் மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
பரவும் செய்தி
"உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு போட்டு இருக்கு. நேற்று இரவோடு இரவாக சம்பவம் நடந்த இடத்தைச் சுத்தம் பண்ணி இன்னைக்கு காலையில் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்களாம்" என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன?
இது முற்றிலும் தவறான தகவல். "கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மாநகராட்சி தரப்பிலோ, நெடுஞ்சாலைத்துறை தரப்பிலோ இதுபோன்று எந்தப் பணியும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த வாரமே அங்கு கிடந்த காலணிகள் அகற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்" என்று கரூர் மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார். வதந்தியை நம்பாதீர்! என்று கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும், நேற்று இரவோடு இரவாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த இடத்தைச் சுத்தம் செய்து பெயிண்ட் அடிப்பதாக தகவல் பரவியது.
முடிவு
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை தரப்பில் இதுபோன்று எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.












Click it and Unblock the Notifications