வாத்தி ரெய்டு.. வசமாக சிக்கிய எ.வ.வேலு! என்ன பிரச்சனை? அடுத்தடுத்து மாட்டும் மாஜிக்கள்!
சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை மற்றும் திருவண்ணாமலை இல்லங்களிலும், அவரது அலுவலகங்களிலும் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். இது எ.வ.வேலு மட்டுமல்லாது சில முன்னாள் அமைச்சர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டமன்ற கூட்டத்தொடரில்தான் இந்த பிரச்சனை வெடிக்க தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மாதம் வெறும் 500 பேர் மட்டுமே வந்து செல்லும் கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட முந்தைய அரசு செலவு செய்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.

நெடுஞ்சாலைத்துறையின் முறைகேடுகள்
அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாத்ரூம் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், மல்டி லெவல் கார் பார்க்கிங் என்கிற பெயரில் வீண் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறையுடன் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் நின்றுவிடவில்லை. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வனம் என பல்வேறு துறைகளில் 800க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை திமுக எதிர்க்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமானதுதான் நெடுஞ்சாலைத்துறை.
சவ்வூடு மண்
கடந்த ஆட்சியில், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை 4 வழி பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்காக சவ்வூடு மண் எங்கிருந்து? எவ்வளவு எடுக்கப்பட்டது? என்பதில்தான் பிரச்சனை வெடித்திருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலை போடுவதற்காக திருத்தணியை சுற்றியிருக்கும் ஏரியிலிருந்து சவ்வூடு மண் எடுக்கப்பட்டது. குறிப்பாக பட்டாபிராமபுரம் ஏரியில் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அரசு அனுமதித்திருந்தது.
அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்ட மண்
ஆனால், தினமும் சுமார் 12 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கொஞ்ச நாட்களிலேயே மண் காணாமல் போவதை உணர்ந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரையடுத்து மண் அல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் தடையை மீறி மண் அள்ளப்பட்டதாகவும், அதிகாரிகள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த ஒரு ஏரியில் மட்டுமே இந்த அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது எனில், மற்ற ஏரிகளில் எவ்வளவு மண் எடுக்கப்பட்டிருக்கும்? இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் விஜய் தனிப்பட்ட முறையில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
வாத்தி ரெய்டு
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள், லஞ்சம், முறைகேடுகள் காரணமாக அதிருப்தியடைந்த மக்கள், நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் எனில், முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த பின்னணியில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டு, முறைகேடுகளை தோண்டி எடுக்க அவருக்கு அசைமென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதை தொடர்ந்துதான் இன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். அதேபோல, இந்த ரெய்டு இத்துடன் நிற்காது என்றும் இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத்துறை, வனத்துறை என்று பல்வேறு துறையின் முன்னாள் அமைச்சர்களை நோக்கி நீளும் என்றும் சொல்லப்படுகிறது. ரெய்டு விஷயத்தில் விஜய் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications