Fact Check: சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறதா? பரவும் தகவல்.. உண்மை என்ன?
சென்னை: சாம்சங் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், தமிழக அரசு தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது. சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக முன்னணி ஊடகமான சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாம்சங் தொழிற்சாலை. இந்த ஆலை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஏசி, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்து அங்கீகரிக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்து போராடி வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர்கள் சிவி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மு.அன்பரசன் ஆகியோர் சாம்சங் நிறுவன தரப்பிடமும் தொழிலாளர்கள் தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 14 முன்மொழிவுகள் சாம்சங் நிறுவனத்தாலும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இடையேயும் உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
சாம்சங் ஆலை இடமாற்றமா?: இந்தச் சூழலில், சாம்சங் நிறுவனத்தை காஞ்சிபுரம் சுங்குவார்சக்கரத்தில் இருந்து நொய்டாவிற்கு இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தொழிற்சங்க விவகாரம் தொடர்பாக தொடர் போராட்டம் நடந்து வருவதால், சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு இடமாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அமைச்சர் மறுப்பு: சாம்சங் ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானது என்றும் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவன மூத்த அதிகாரி மறுப்பு: சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளதாக சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக தகவல் பரவியதை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சாம்சங் ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
முடிவு
சாம்சங் ஆலை வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதாக வெளியான செய்தி தவறானது என அமைச்சரும், சாம்சங் நிறுவன மூத்த அதிகாரியும் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications