கோவில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவு செய்யப்பட்டதா? உண்மை என்ன? தமிழக அரசு விளக்கம்
சென்னை: கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக' அனிதா சம்பத் பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இந்த நிலையில் அவர் பேசிய தகவல் உண்மையா? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்தது. இது குறித்து இங்கே பார்க்கலாம்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதில் மேலும் பிரபலமடைந்தார். இதேபோல் திரைப் படங்கள் மற்றும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

அனிதா சம்பத் வீடியோ: சமீபத்தில் கூட பாக்கியலட்சுமி சீரியலில் சமையல் போட்டி நடத்தி வைக்கும் தொகுப்பாளராக அனிதா சம்பத் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவானது இணையத்தில் வேகமாக பரவி பலரது கருத்துக்களையும் பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் அனிதா சம்பத், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அங்கு ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே?" என்று கேள்வி கேட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் கருத்து: இந்த வீடியோவை பதிவிட்டதும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. மேலும் பலரும் அனிதா சம்பத்தின் வீடியோவுக்கு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். நெட்டிசன்கள் சிலர், 'எங்க ஊரிலும் இப்படித்தான் சின்டெக்ஸ் டேங்க் மட்டும் வைத்துவிட்டு அதற்கு லட்சக்கணக்கை எழுதி விடுகிறார்கள்' என்றனர். சில நெட்டிசன்ஸ், 'அக்காவுக்கு சற்று தெளிவு தேவை.. நீங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்துவிட்டு இப்படி பேசுவது சரியல்ல' என்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் பலரும் இந்த தகவல் உண்மையா இல்லை பொய்யா என்று விவாதித்து வந்தனர்.
உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்: இந்த நிலையில், படிக்கட்டுக்கு ரூ11 லட்சமா? என்று நீங்கள் கேட்பது பொய் செய்தி என்று தமிழ்நாடு உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்து இருப்பதாவது:- 'கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக' அனிதா சம்பத் பேசிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?: காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில், திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செலவினங்கள் பின்வருமாறு:-
செய்யப்பட்ட பணிகள்:
* படித்துறை அமைத்தல்: 1.70 லட்சம்
* Iniet and Outlet: 0.66 லடசம்
* நடை பாதை அமைத்தல் பேவர் பிளாக்: 6.17 லட்சம்
* நடை பாதையைச் சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தல்: 0.96 லட்சம்
* மேசைகள்: 0.12 லட்சம்
* GST - 1.73 லட்சம் என மொத்தம் 11.36 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வதந்தியைப் பரப்பாதீர். என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications