3 ஆண்டுகளுக்கு தங்கம் விலை பறக்கும்.. புதிதாக முதலீடு செய்வோர் கவனத்திற்கு.. பிஆர் சுந்தர் வார்னிங்!
சென்னை: அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர் பிஆர் சுந்தர் கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இது சரியான நேரமல்ல என்று கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்து வருவோருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்வு சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. பண்டிகை காலங்களில் கையில் கொஞ்சம் பணம் இருக்கும் போது அதனை தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் அதிகளவில் இந்தியாவில் உள்ளனர். ஆனால் பண்டிகை காலங்களில் கூட தங்கம் வாங்க முடியாத அளவிற்கு விலை அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கிராம் ரூ.12,200க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து பங்குச்சந்தை நிபுணர் பிஆர் சுந்தர் பேசுகையில், தங்கம் விலை இறங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் சவரனுக்கு ரூ.30 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவும் போது, தங்கம் விலை அதிகரிக்கும்.
1980களில் ஈரானில் புரட்சி வெடித்த போது, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது தங்கம் 6 மாதங்களில் 4 மடங்கு அதிகரித்தது. சமீப காலங்களில் தங்கம் விலை ஏறுவதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம். அவரே ஒரு அசாதாரணமான மனிதர் தான். டிரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததில் இருந்து, அவர் செய்த சம்பவங்கள் ஏராளம். நிலையற்ற கொள்கையோடு இருக்கிறார்.
குழந்தைகளை போல் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் வரி விதிப்பு ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல் உலகளவில் பொருளாதார அளவில் வட்டி விகிதங்கள் குறையும் போதும் தங்கம் விலை உயரும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததுதான். பொருளாதார சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும்.
அமெரிக்காவில் ஏற்கனவே 3 முறை வட்டி விகிதங்களை குறைத்துவிட்டார்கள். அடுத்த சில மாதங்களில் இன்னும் 2 முறை வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது. தங்கம் விலை இறங்குவதற்கான காரணிகள் எதுவும் கண்ணில்படவில்லை. இன்னும் 3 ஆண்டுகள் டிரம்ப் பதவியில் இருக்கப் போகிறார். அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சமீப காலமாக தங்கம் விலை அதிகரித்திருப்பதால், இப்போது தங்கம் வாங்குவது சரியான முடிவு அல்ல.. ஏற்கனவே தங்கம் வாங்கிக் கொண்டே வந்திருந்தால், இப்போதும் வாங்கலாம். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யாமல், புதிதாக செய்தால், பாதிப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதனால் புதிதாக தங்கத்திஒல் முதலீடு செய்வோர் கொஞ்சம் காத்திருக்கலாம். 2013ல் ஒரே நாளில் தங்கத்தின் விலை இறங்கியது. அதனால் ஏதாவது நல்ல விஷயம் நடக்கலாம். தங்கத்தை அதிகளவில் வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications