அதிமுகவில் இருந்து வந்த 4 பேருக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை.. விஜய் முடிவால் குழப்பம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் அந்தக் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தலில் தவெக சார்பில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அந்த கனவில் தற்போது மண் விழுந்துள்ளதால் தவெகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அதிமுகவை விட்டு விலகி தவெக மற்றும் திமுகவில் இணைந்து வருகிறார்கள். சிட்டிங் எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

அதிமுக எம்எல்ஏக்கள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 5 சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதில் விஜயபாஸ்கரை தவிர பெருந்துறை ஜெயகுமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகிய 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தலில் தவெக சார்பில் நின்று பழையபடி பவர்புல்லாக வலம் வர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் அந்த நான்கு பேருக்கும் சீட் வழங்க தவெக தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில்,
"தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தற்போது சபாநாயகர் போக, தவெக 106, காங்கிரஸ் 5, விசிக 2, கம்யூனிஸ்ட் கட்சிகள் 4, முஸ்லிம் லீக் 2, அமமுக காமராஜ் உள்பட தவெகவுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
இடைத்தேர்தலில் சீட் இல்லை
கடந்த மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் சபாநாயகரிடம் சரண்டராகிவிட்டனர். எனவே இவர்களும் கடைசி வரை தவெக கூட்டணியில் நிலைப்பார்கள் என்பதில் முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை இல்லை. அதனால் அதிமுகவில் இருந்து வந்த எம்எல்ஏக்கள் தவெகவில் சீட் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.
இடைத்தேர்தலில் சர்வே அடிப்படையில் தான் சீட் வழங்கப்படும் என தவெக மேலிடம் முடிவு செய்துள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பதால் அவர்களின் பெயர் தொகுதிக்குள் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகியுள்ளது. அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கினால் தேர்தலில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் விஜய் யோசிக்கிறார். அதேநேரம் தங்களை நம்பி வந்தோருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நினைக்கிறார். எனவே அவர்களுக்கு
ஏதாவது ஒரு வாரிய தலைவர் பதவியை கொடுத்து சமாளிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிருப்தியான அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications