இனி டிரான்ஸ்பருக்கு நோ லஞ்சம்.. ஆன்லைன் மூலம் மட்டுமே பணியிட மாறுதல்.. முதல்வர் உத்தரவு!
சென்னை: இனி டிரான்ஸ்பருக்கு லஞ்சம் தரக்கூடாது.. ஆன்லைன் மூலம் மட்டுமே பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாறுதல் (Transfer) நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், நகராட்சி நிர்வாகத் துறை மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனிவரும் காலங்களில் பணியிட மாறுதலுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இடைத்தரகர்கள் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி
இதுவரை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தங்களின் இடமாறுதலுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை நேரடியாக அணுகி விண்ணப்பித்து வந்தனர். இந்த வழக்கமான நடைமுறையைப் பயன்படுத்தி, சில இடைத்தரகர்கள் (Brokers) ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றுத் தரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் எப்போதும் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
இந்த ஊழல் கூட்டத்தையும், முறைகேடுகளையும் வேரோடு ஒழிக்கும் வகையிலும், தகுதியான பணியாளர்களுக்கு எளிய முறையில் இடமாறுதல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை
நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பணியிட மாறுதல் கோரும் ஊழியர்கள் இனி நேரடியாக அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (Email) முகவரி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
கடுமையாக்கப்படும் விதிகள்: நிபந்தனைகள் என்னென்ன?
புதிய ஆன்லைன் முறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது ஊழியர்கள் சில முக்கிய விபரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது:
பணிக்காலம்: சம்பந்தப்பட்ட ஊழியர் தற்போது பணியாற்றி வரும் இடத்தில் எத்தனை ஆண்டுகள் மற்றும் எத்தனை மாதங்கள் பணியாற்றியுள்ளார் என்ற விவரத்தை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள்: விண்ணப்பிக்கும் ஊழியர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action), குற்றச்சாட்டுகள் அல்லது துறை ரீதியான விசாரணைகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்த விபரங்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் தனியாக அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று விருப்ப இடங்கள் (Options): இடமாறுதல் கோருவோர் தாங்கள் விரும்பும் மூன்று இடங்களை முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
மருத்துவக் காரணங்கள்: உடல்நலக் குறைவு காரணமாக முன்னுரிமை அடிப்படையில் இடமாறுதல் கோரினால், அதற்கான முறையான மருத்துவ ஆவணங்களை (Medical Certificates) விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவின் பேரில் அதிரடி
இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியிட மாறுதல்கள் எந்தவித முறைகேடும் இன்றி, முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படியே இந்த நேரடி விண்ணப்ப முறை ரத்து செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையிலான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான ஊழியர்களுக்கு முறையான வழியில் இடமாறுதல் தடையின்றி கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.
நகராட்சி நிர்வாகத் துறையின் இந்த அதிரடி டிஜிட்டல் சீர்திருத்தம், அரசு ஊழியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications