6 மாதம்தான் விஜய் ஆட்சி.. மீண்டும் நாள் குறித்த அனிதா! தவெக எம்எல்ஏக்கள் கூப்பிடாமலே வருவாங்களாம்
தூத்துக்குடி: விஜய்யின் தவெக ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் எனவும், தவெக எம்.எல்.ஏக்கள் கூப்பிடாமலேயே திமுக பக்கம் வந்துவிடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். தவெக எம்.எல்.ஏக்கள் எப்போது ஓடலாம் என்று காத்துக்கொண்டு இருக்காங்க.. அதை தடுப்பதற்காகத் தான் எங்களை காட்டி அவுங்களை பயமுறுத்துகிறார்கள் எனவும் பேசியுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறி வரும் நிலையில், நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அனிதா பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் சூடு பறக்க வைத்துள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

அதிமுகவை விஜய்யால் அழிக்க முடியாது.
ஆட்சி என்பது உங்களுக்கு நிரந்தரமா? 6 மாதத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.. கஞ்சா விற்கிறவனும் லாட்டரி சீட்டு விற்கிறவனும் எம்.எல்.ஏ ஆகிவிட்டு , என்னைக்கு இந்த கட்சியில் இருந்து ஓடலாம் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் கூப்பிட வேண்டியது இல்லை. தானாக வந்துவிடுவார்கள். இந்த கட்சி விளங்கவே விளங்காது.. நாம மாட்டிக்கிடுவோம் என்று குறைந்தது இரண்டு மாதத்தில் வரப்போவது உறுதி.
அந்த வகையில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் இருக்கிறது. நம்முடைய ஸ்டாலின் தான் முதல்வராக வருவார். யாராலும் தடுக்க முடியாது. அதிமுகவை விஜய்யால் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. தலைவன் எங்கே வேண்டுமானாலும் ஓடலாம். தொண்டன் அங்கேயே இருப்பான். யாரை ஒழித்தால் சரியாக வரும் என்று தொண்டருக்கு தெரியும்.
6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்
உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவுடன் கை கோர்ப்பார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது, திமுகவை அசைத்து பார்க்கலாம் என்று பார்த்தால் அசைத்து பார்க்க முடியாது. நான் எப்போதும் சொல்வேன்.. இன்னும் 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும். நான் சொல்வதை புரிந்தால் புரிந்து கொள்ளட்டும். தெரிந்தால் தெரிந்து கொள்ளட்டும். தவெக எம்.எல்.ஏக்கள் எப்போது ஓடலாம் என்று காத்து இருக்கிறார்கள். அதை தடுப்பதற்காக எங்களை காட்டி அவுங்களை பயமுறுத்துகிறார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.
தானாகவே திமுக பக்கம் வருவார்கள்
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. விஜய் அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. விஜய்க்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பதால் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். அதே நேரத்தில் விஜய் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என்று திமுக, அதிமுக ஆருடம் கூறி வருகிறது. பெரும்பான்மையை பெறுவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெக தங்கள் பக்கம் இழுப்பதாக அதிமுக விமர்சித்து வரும் நிலையில், தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றசாட்டு தமிழக அரசியலில் பரபர்பபை கிளப்பியுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரி ஊத்தங்ககரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் தானாகவே திமுக பக்கம் வருவார்கள் என்று அனிதா கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications