இட்லி, தோசைக்கு மாவு அரைக்கிறீங்களா? "இதை" ஒரு பங்கு போடுங்களேன்! அப்பறம் பாருங்க உங்க உடம்பை!
சென்னை: இட்லிக்கு மாவு அரைக்கும் போது உருட்டு உளுந்துடன் இந்த பொருளையும் சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் கிடைக்குமே!
எதை தொட்டாலும் அதில் ரசாயனம், பூச்சிக் கொல்லி என இருக்கிறது. மேலும் சிலர் குறைந்த காலத்தில் அதிக மகசூலை பெற சில ரசாயனங்களையும் ஹைபிரிட் வகைகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த காலம் போல் உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்றால் இல்லை!

எனினும் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமான தற்போது பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்டவைகளை மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வர சொல்கிறார்கள்.
கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, சிகப்பு அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொண்டு நீண்ட வாழ்வு வாழ மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் கருப்பு உளுந்து என்பதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
அதிலும் பெண்கள் கட்டாயம் இந்த கருப்பு உளுந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். கருப்பு நிறத் தோல் கொண்ட உளுந்துதான் கருப்பு உளுந்து என்கிறோம். இந்த தோல் நீக்கப்பட்டு நமக்கு கிடைப்பதுதான் குண்டு உருட்டு உளுந்து. கருப்பு உளுந்துவில் பெண்கள் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன.
அதிலும் பூப்பெய்தும் பெண்களுக்கும் அந்த வயதுடைய பெண்களுக்கும் நாம் கருப்பு உளுந்தை கொடுக்க வேண்டும். இந்த கருப்பு உளுந்தால் முதமையில் ஏற்படும் மூட்டு வலியையும் எலும்பு பிரச்சினைகளையும் தடுக்கலாம், இந்த கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து இருக்கிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும்.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்போதுமே கருப்பு உளுந்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் முடியும். இதயத்திற்கும் இந்த உளுந்து மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி உள்ளது. மேலும் ரத்த ஓட்டத்தை தூண்டி உடல் உறுப்புகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் கருப்பு உளுந்து பாதுகாப்பானது. கர்ப்பத்துக்கு நன்மை பயக்கும். அதே நேரம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து எலும்புகளை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஏற்படுவதை குறைக்கிறது. இதில் புரதசத்து அதிகம் உள்ளது.
இது கொழுப்பை குறைக்கிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கர்ப்ப காலத்தில் கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிக்கு அஜீரண கோளாறுகளை சரி செய்யும். நல்ல பாக்டீரியாக்களை குடலில் பராமரிக்கவும் செய்யும். கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நோய்த் தொற்றையும் இந்த கருப்பு உளுந்து தடுக்கும்.
இப்படிப்பட்ட கருப்பு உளுந்து மாதவிடாய் வலியை போக்கும், பூப்பெய்த குழந்தைகளுக்கு கொடுத்தால் இடுப்பு எலும்பு நன்கு வலுவாகி அவர்களுக்கு மாதவிடாய் வலி ஏற்படாமல் இருக்கும். மெனோபாஸ் வயதுடைய பெண்களுக்கும் தரலாம்.
இந்த கருப்பு உளுந்தை கஞ்சி, களியாக சாப்பிடலாம். இதற்கெல்லாம் அதிக மெனக் கெட வேண்டும் என சிலர் நினைத்துக் கொண்டு கருப்பு உளுந்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இட்லி மாவுடன் கருப்பு உளுந்தை சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது வெள்ளை உளுந்தை எவ்வளவு ஊற வைப்பீர்களோ அதற்கு பதிலாக கருப்பு உளுந்தை ஊற வைத்து அரைக்கலாம். இதில் இட்லி கருப்பு நிறத்தில் இருப்பது போல் இருக்கும். அவ்வாறு பிடிக்காவிட்டால் மொத்தமாக போடும் வெள்ளை உளுந்தில் ஒரு பகுதி கருப்பு உளுந்தாக போடலாம். இவ்வாறு செய்வதால் கருப்பு உளுந்தின் பலன்கள் ஏதோ ஒரு வகையில் நம் உடம்பிற்குள் சேர்வது நல்லது.












Click it and Unblock the Notifications