நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானதா? ஆதாரத்துடன் விளக்கும் பிரபல மருத்துவர்! அப்போ எது பாதுகாப்பானது?
சென்னை: இப்போதெல்லாம் ஆயில் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகப் பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், உண்மையில் இது பாதுகாப்பானதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்குப் பதிலாக இப்போது செராமிக் பாத்திரங்களும் வந்துள்ளன. உண்மையில் இதில் எது பாதுகாப்பானது.. இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதைப் பிரபல மருத்துவர் விளக்கியுள்ளார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் உடல் பருமன் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் பலரும் டயர்ட் எனச் சொல்லி எண்ணெய் இல்லாமல் சாப்பிடும் முறைக்கு மாறி இருக்கிறார்கள்.

இதற்காகப் பலரும் நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், இதனால் உடலுக்குக் கெடுதலா என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நான் ஸ்டிக்: பொதுவாக பிடிஎஃப்இ என்பதன் மூலமாகவே இந்த நான் ஸ்டிக் பாத்திரங்களைச் செய்கிறார்கள். இந்த பிடிஎஃப்இ பொதுவாகவே ஹைடிரோபோபிக் (hydrophobic) பண்பு கொண்டது. அதாவது, தண்ணீர் பட்டாலும் இதில் எதுவும் ஆகாது. இதன் காரணமாகவே தண்ணீர் பட்டாலும் ஓட்டாமல் மேலே அப்படியே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதில் வளவளப்பு தன்மை அதிகம். இதனால் தோசை ஊத்தும் போதும், சமையல் செய்யும் போதும் உணவு அதில் ஒட்டாது.
இதனால் எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தலாம். இதன் காரணமாகவே இது மக்களிடையே பிரபலமானது. ஆனால், இது உடலுக்கு நல்லதா.. இது குறித்து பிரபல மருத்துவர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது வரும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் 500 டிகிரி செல்சியஸ் மேல் சூடாகும் போது, அதில் இருந்து விஷத்தன்மை கொண்ட வாயு வெளியேறலாம். அதை நீங்கள் சுவாசித்தால் தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினை ஏற்படலாம். எனவே, அதிக சூட்டில் செய்ய வேண்டிய உணவுகளை இதில் தவிர்க்க வேண்டும்.
ஆபத்து: ஆனால், பொதுவாக நாம் சமைக்கும் முறையில் தாளிக்கும் போது 200 முதல் 300 டிகிரி செல்சியஸ் வரை தான் வெப்பம் இருக்கும். அதிகமாக வைத்து சமைத்தாலும் பெரும்பாலும் 300 முதல் 450 டிகிரி வரை தான் வெப்பம் போகும். எனவே, வீட்டில் சமைக்கும் போது 500 டிகிரி தொடுவது கடினம். ஆனால், அதற்கு வாய்ப்பு இருக்கிறது.
செராமிக்: இதனால் இந்த நான் ஸ்டிக் பாத்திரங்களின் மவுசு குறைகிறது. இதனால் இப்போது செராமிக் கோடிங் பாத்திரங்களைச் செய்கிறார்கள். இந்த செராமிக் என்றால் களிமண் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவை உண்மையில் சிலிகா என்ற மணலில் இருந்து செய்யக் கூடியது. இது ஒப்பீட்டளவில் முன்பு சொன்னதை விடப் பாதுகாப்பானது தான். இதில் கெமிக்கல் இல்லை. இதனால் உணவுப் பொருட்களுடன் பெரிதாக ரியாக்ட் ஆகாது.
ஆனால், செராமிக் நீண்டகாலம் இருக்காது. இந்த செராமிக் கோட்டிங் சீக்கிரம் போய்விடும். எனவே, கோட்டிங் போன பிறகு சமைத்தால் இதனால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
எது பெஸ்ட்: இரண்டிலும் பெரியளவில் பிரச்சினை இல்லை என்றாலும் சில சிக்கல்கள் இருக்கத் தான் செய்கிறது. உண்மையில் எது பாதுகாப்பானது தெரியுமா.. சாதாரண இரும்பு பாத்திரங்கள், இரும்பு தோசைக்கல் தான். நாம் ஒரே தோசை கல்லைப் பயன்படுத்தி வந்தால் எண்ணெய் பட்டுப் பட்டு அதுவே இயல்பாக நான் ஸ்டிக் போல வந்து இருக்கும். இந்தளவுக்குப் பாதுகாப்பானது எதுவுமே இல்லை. எந்த கெமிக்கலும் இருக்காது. நமது நாட்டில் யாருக்கும் இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பதில்லை. அதற்குக் காரணமே இதுதான்.
அடிப்படை சிக்கல்: சரி இன்னொரு அடிப்படை விஷயத்தை யோசித்துப் பாருங்கள். இந்த நான் ஸ்டிக் எல்லாம் ஏன் ஃபேமஸானது. எண்ணெய் உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணம் மக்களிடையே பரவியதே இதற்குக் காரணம். ஆனால், உண்மையில் எண்ணெய் கெட்டது கிடையாது. எண்ணெய்யை விட விட மாவுச்சத்து தான் நீரிழிவு நோயை அதிகரிக்கும். இதுதான் இங்கே அடிப்படை பிரச்சினை" என்றார்.












Click it and Unblock the Notifications