கேபினட் செயலாளர் டி.வி.சோமநாதனுக்கு பதவி நீட்டிப்பு? சென்னைக்கே வந்தாரே மோடி! யார் இந்த டிவிஎஸ்?
டெல்லி: மத்திய அரசின் கேபினட் செயலாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
1987ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன். தமிழக, மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருந்தார். பொது நிதி, பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கார்பரேட் விவகாரங்கள் துறை இணைச் செயலாளராக இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து 2015 - 2017ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலக இணைச் செயலாளர், கூடுதல் செயலாளராக பணியாற்றியிருந்தார்.
2011- 2015 ஆம் ஆண்டு வரை உலக வங்கியின் இயக்குநராகவும் இருந்தார். தமிழகத்தில் பணியில் இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் செயலாளர், பட்ஜெட் துணைச் செயலாளர், விஜிலென்ஸ் இணை ஆணையர், மெட்ரோ குடிநீர் நிர்வாக இயக்குநர், வணிக வரித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக உள்ள சோமநாதனின் மகள் திருமணத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி நேரில் வந்து வாழ்த்தினார். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் சோமநாதன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பானது கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அதாவது சோமநாதன் மத்திய நிதித் துறை செயலாளராக இருந்த நிலையில், 33 ஆவது மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2026 ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற போகிறது.
இந்த நிலையில் சோமநாதன் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் எதையெல்லாம் செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை கடிதம் வாயிலாக எழுதியிருந்தார்.
அதில் முக்கியமானது ஆலோசனை கூட்டங்களை எப்படி நடத்துவது, எத்தனை மணி நேரம் நடத்துவது என்பதை விவரித்துள்ளார். எந்த ஆலோசனை கூட்டமும் தாமதமாக தொடங்கி நீண்ட நேரம் நடக்கக் கூடாது. அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரைதான் நடத்த வேண்டும். நீண்ட நேரம் நடத்தினால் அந்தந்த ஐஏஎஸ் அதிகாரிகள் அவரவர் துறை சார்ந்த வேலைகளை எப்படி செய்வார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து சோமநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு நெருக்கமான இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













Click it and Unblock the Notifications