அப்ளிகேசன் போட்ட 82 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்கள்.. வரப்போகுது முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 82 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம் வந்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் அரசு நடத்துவது வழக்கம். காலியிடங்கள் தேவைகளை பொறுத்து இந்த பணியிட மாறுதல்கள் இருக்கும். அந்த வகையில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணிப்பிப்பது கடந்த மே 13ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர்கள், தங்களது எமிஸ் - ஐடி மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது பள்ளி கல்வி துறை.
தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து உள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்துள்ள மாறுதல் விண்ணப்பங்களை, உயர்நிலை, மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது.
மேலும் ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும் என்றும், அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் பள்ளி கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பொது மாறுதல் கலந்தாய்விற்காக மே 25ம் தேதி விண்ணப்பம் செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் எனவே, எவ்வித விடுதலுமின்றி மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து, உரிய அலுவலர்களால் நாள்தோறும் நிலுவையில்லாமல் ஏற்பளித்திட வேண்டும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் கடைசி தேதிமுடிந்த நிலையில்,
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மொத்தம் 82 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம் வந்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை இதுபற்றி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில், 18 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,640 விண்ணப்பங்கள் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 25 ஆயிரத்து 711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குனர் மாறுதலுக்கும், 989 விண்ணப்பங்கள் இடைநிலை, இதர ஆசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டுள்ளன. மொத்தம் 82 ஆயிரத்து 479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. பிறகு, முன்னுரிமை பட்டியல் வெளியிட்டு, மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications