குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா.. எழுதிய பலருக்கும் நடந்த நல்ல விஷயம் தெரியுமா?
சென்னை : (TNPSC group 4 2025) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 3,935 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூலை 12-ந்தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு மாதம் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலரும் தற்போது ஆர்வமுடன் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளார்கள்.. விண்ணப்பிக்கும் பலரும் அறிய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. குரூப் 4 தேர்வு எழுதிய பலருக்கும் அவர்களே எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.. அதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்பும் பலருக்கும் கலங்கரை விளக்கம் என்றால் அது குரூப் 4 தேர்வு தான். சுமார் 10000 பேருக்கு ஆண்டுக்கு அரசு வேலை தந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவர் உள்பட பல்வேறு பணியிடங்களில் சேர முடியும்.

அதன்பிறகு தகுதியை வளர்த்துக் கொண்டு, பதவி உயர்வு பெற தேர்வுகளை எழுதி மிகப்பெரிய அதிகாரிகளாக மாற முடியும். அதேநேரம் அரசு வேலையில் சேர விரும்புவோர், திறமை இருந்தாலே குரூப் 4 தேர்வில் வென்று பணியாணை பெறலாம். லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. சிபாரிசு தேவையில்லை.. தேர்வில் ஜெயித்தாலே விஏஓ வேலை உறுதி என்பது தான் இப்போது வரை உள்ள நடைமுறை எதார்த்தம்.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள 2025-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மே 24 வரை விண்ணப்பிக்கலாம்
இதில், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2025-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. தேர்வர்கள் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tnpscexams.in என்ற இணையதளத்தில் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மே மாதம் 29-ந்தேதி முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 12ம் தேதி தேர்வு
குரூப்-4 தேர்வு வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப்-4 தேர்வு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்
குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) 2022-ம் ஆண்டு அறிக்கையில் 3 நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் அறிக்கையில் 2 நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் என மொத்தம் 5 நிதியாண்டுகளுக்கு 17 ஆயிரத்து 799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இதன்படி ஒரு ஆண்டில் சராசரியாக 3 ஆயிரத்து 560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
3500 பணியிடங்கள்
2022, 2024-ம் ஆண்டுக்கான குரூப்-4 காலிப்பணியிடங்களின் சராசரி எண்ணிக்கையை 3 ஆயிரத்து 560 ஆக இருந்துள்ளது. எனவே கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டு கூடுதல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பணியிடங்களின் எண்ணிக்கை தடாலடியாக உயர்த்தப்படுவது நடந்துள்ளது.
10000 ஆக அதிகரிக்கலாம்
எனவே தற்போது, வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, அரசு துறை மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில், கலந்தாய்வுக்கு முன்பாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படையாகவே டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எனவே வெறும் 3,935 பணியிடங்கள் தானே என்று விண்ணப்பிக்காமல் விட்டுவிடாதீர்கள்.. ஏனெனில் 10000 வரை அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரூப் 4 காலியிடங்கள் அதனைவிட அதிகமாகவே தற்போது உள்ளது. எனவே கொஞ்சம் மனம் தளராமல் கவனமாக படித்தால் அதிகாரியாகி விட முடியும்.












Click it and Unblock the Notifications