டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயம்,.. உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. 6244 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை அண்மையில் எழுதினார்கள்.

இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்வு கடினமாக இருந்தது. இதில் தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். அதேபோல் பொது அறிவிலும் சில கேள்விகள்மிக கடினமாக இருந்தது என்று தேர்வர்கள் கூறினார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போதுகட் ஆப் கடந்த முறையைவிட இந்த முறை குறைய வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சிதேர்வர்கள் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் குரூப் 4 தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருச்சி முத்து செல்வம் உள்ளிட்ட குரூப் 4 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலியிடங்களை நிரப்பும் வகையில், ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்தது. வழக்கமாக டிஎன்பிஎஸ்சி பணி நியமன செயல்முறை முடிந்த பிறகுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிடும். ஆனால் இந்த முறை பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்.
ஏனெனில் டிஎன்பிஎஸ்சி பணி நியமன செயல்முறை முடிந்த பிறகு குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிடும் போது தேர்வர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன் மூலம் பணி நியமனத்திற்கு முன்பே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை பார்வையிட தேர்வர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் தவறுகளை அறிய தேர்வர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் ஏதேனும் தவறு நடந்திருந்தால் தேர்வர்கள் முறையிடவும் முடியும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications