8ம் வகுப்பு , 10ம் வகுப்பு படித்தவர்களா.. ராணுவத்தில் சூப்பர் வாய்ப்பு.. ஆனால் இது ரொம்ப முக்கியம்
திருச்சி: கடலூரில் வரும் 2024 ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் என்றும் 17 முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 17 முதல் 21 வயதுக்குள் உள்ள 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

முகாமில் கலந்துகொள்ள தங்களது அனுமதிச்சீட்டு, கல்விச்சான்றுகள், உறுதிமொழி ஆவணம், காவல்துறை நன்னடத்தை சான்று, பள்ளி நன்னடத்தை சான்று, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்படும் நன்னடத்தை சான்று மற்றும் புகைப்படத்துடன் கூடிய திருமணமாகாத சான்று, சாதிச்சான்று, மதச்சான்று, இருப்பிட சான்று, கடந்த 3 மாதத்திற்குள் எடுக்கப்பட்ட சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம், தேசிய மாணவர் படை சான்று, விளையாட்டு வீரர் சான்று, திருமணமான பெண்கள் அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற கர்ப்பம் இன்மை சான்று, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அணுகலாம்" இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு தலைமையகத்தின் இயக்குனர் பாத்ரே கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், "நடப்பாண்டுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா மைதானத்தில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆள்சேர்ப்பு முகாமில் உடல் தகுதிக்கு மட்டுமே இளைஞர்கள் ஆர்வம் காண்பிக்கிறார்கள். சான்றிதழ்கள் மீது குறைவான கவனம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, நடப்பாண்டு முதல் உடல் தகுதிக்கு நிகராக, ஆவணங்களும் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும்.
முகாமில் பங்கேற்பவர்கள், தேர்வு நுழைவுச்சீட்டு, கல்வி சான்றிதழ்கள், போலீஸ் நடத்தை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்களின் தேர்வுகள் நிராகரிக்கப்படும்" இவ்வாறு கூறியிருந்தார். எனவே சான்றிதழ்கள் விவகாரத்திலும் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications