தமிழக அச்சுத் துறையில் வேலை.. ஐடிஐ, டிப்ளமோ தகுதி தான்.. மாதம் ரூ.71 ஆயிரம் சம்பளம்!
சென்னை: தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் பைண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 71 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 5 ஜூனியர் பைண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள இதன் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் பைண்டர் -05 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கல்வித் தகுதியை பொறுத்தவரை ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு அப்ரெண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி துறையை எடுத்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மிகாதவர்களுமாக இருத்தல் வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.19,500 - 71,900 வரை வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025 ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை "ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை - 02" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
பிற விவரங்கள்:
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்டு அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 29.08.2025 மாலை 5.30 மணிக்குள் கிடைக்கத் தக்க அளவில் அனுப்பி வைக்க வேண்டும். 29.08.2025 மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, மேற்கண்ட காலியிடங்கள் நிரப்பப்படும். உரிய முறையில் சான்றொப்பமிட்ட தேவையான சான்றாவணங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக் கூடாது.
விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, விண்ணப்பத்துடன் கல்வி (ம) தொழில்நுட்பக் கல்விச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுக்குரிய சான்றிதழ், முகவரிக்கான சான்றிதழ் மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் சான்றிடப்பட்ட நகல்களுடன் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் பதிவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுகளை கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
(பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை)
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்வது அவசியம். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.stationeryprinting.tn.gov.in/B2_18317_2025_SCST_shortfall.pdf












Click it and Unblock the Notifications