கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை! மாதம் 34 ஆயிரம் சம்பளம்.. 12ம் வகுப்பு தகுதி தான்.. விட்றாதீங்க
சென்னை: கூடங்குளத்தில் உள்ள இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் / தொழில்நுட்பவியலாளர் (Stipendiary Trainee/Technician - ST/TN) பதவிகளில் காலியாக உள்ள 266 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அணுசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அணு மின் நிலைம் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணு மின் நிலையங்களில் ஒன்றாகும். இந்த அணுமின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அணு மின் நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப பணிகள், கட்டுமான பணிகள் இதர பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் உள்ள 266 காலிப்பணியிடங்களில், பிளான்ட் ஆபரேட்டர் - 136, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 15, இன்ஸ்ட்ரூமென்டேஷன் மெக்கானிக் - 15, எலக்ட்ரீஷியன் - 47, ஃபிட்டர் - 30, டர்னர் - 05, மெஷினிஸ்ட் - 05, வெல்டர் - 02 என நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், அறிவியல் பாடத்தில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) 10+2 அல்லது ஐ.எஸ்.சி தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு அளவில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் உள்ளிட்ட பிற பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் தனித்தனியே குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட பிரிவில் இரண்டு வருட ஐ.டி.ஐ சான்றிதழ் அவசியம்.
ஐ.டி.ஐ படிப்பு இரண்டு வருடங்களுக்கு குறைவாக இருந்தால், படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
வயது வரம்பு:
2026 ஜூன் 29 அன்றைய நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்குப் பொதுப் பிரிவில் 10 ஆண்டுகள், OBC ல் 13 ஆண்டுகள், ST/SC ல் 15 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
பயிற்சிக் காலத்தில், முதல் வருடத்தில் மாதந்தோறும் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் இது மாதத்திற்கு ரூ.22,000 ஆக உயரும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, பணியாளர்கள் நிலை 3 இன் கீழ் மாதம் ரூ.34,720 சம்பளம் பெறுவார்கள். இது ஒரு நிரந்தரமான அரசுப் பணி என்பதால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்குகிறது.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் மூன்று கட்ட தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் கட்டமாகப் பூர்வாங்க கணினிவழித் தேர்வு (Preliminary Test), அதைத் தொடர்ந்து மேம்பட்ட கணினிவழித் தேர்வு (Advanced Test) நடைபெறும். வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
பட்டியல் சாதியினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 2026 ஜூன் 8 முதல் 2026 ஜூன் 29 வரை https://www.npcilcareers.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, வழிமுறைகளைப் பின்பற்றவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://drive.google.com/file/d/117IkerEyhh1eQClCBlhfmjVu0xHDIUbJ/view












Click it and Unblock the Notifications