தமிழ்நாட்டில் விபி ஜிராம் ஜி திட்டம் இன்று அமலுக்கு வந்தது.. 15 நாளில் சம்பளம்.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டப்படி 100 நாள் வேலை திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். அ இந்த திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும்.. இந்த திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் நாடு முழுவதுத் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் அதாவது 100 நாள் வேலைத்திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மத்திய அரசு இந்த திட்டத்தை மாநில அரசின் உதவிகளுடன் செய்து வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தில் சில அடிப்படை விஷயங்களை மாற்றி. 'விக்சித் ராம் ஸ்ரீ' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிறது. இதன்மூலம் 125 நாள் வேலை கிடைக்கும்.

12642 கோடி திட்டம்
தமிழகத்தில் ₹12,642 கோடி மதிப்பிலான புதிய வேலைவாய்ப்புத் திட்டமான 'விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் கிராமின்' (VB-G RAM G) என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டு, அதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டம் இன்று முதல் முறைப்படி அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவான ₹12,642 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60 : 40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி மத்திய அரசின் பங்கு (60%): ₹7,585 கோடியாகும். தமிழக அரசின் பங்கு (40%): ₹5,057 கோடியாகும்.
125 நாட்கள் வேலை
அதன் முழு விவரம்: விபி ஜிராம் ஜி திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வேலை வழங்காவிட்டால், வேலைவாய்ப்பு உதவித்தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட கூலியில் குறைந்தபட்சம் பாதியும் வேலை இழப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்.
15 நாட்களுக்குள் சம்பளம்
வேலை செய்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், 16-வது நாளில் இருந்து நிலுவைத்தொகைக்கு நாளொன்றுக்கு 0.05 சதவீதம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். திட்டத்தில் பங்கேற்க விரும்பும் குடும்பங்கள் கிராம பஞ்சாயத்தில் பதிவு செய்து வேலை உறுதி அட்டையைப் பெற வேண்டும். இந்த அட்டை 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். அட்டையின் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகள். அதன் பின்னர் புதுப்பிக்கப்படும்.
பெண்களுக்கு முன்னுரிமை
தனியாக வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பழங்குடியினர், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும்.தனித்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கிராம சபை ஒப்புதலுடன் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
அறுவடை காலங்களில் கிடையாது
எந்தப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராம மக்களின் தேவைகளின் அடிப்படையில் கிராம சபையே தீர்மானிக்கும். இந்த திட்டத்தின் மிக முக்கியமாக விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்சகட்ட விவசாய காலங்களில் ஆண்டுக்கு மொத்தம் 60 நாட்கள் வரை திட்டப்பணிகள் நடைபெறாது. விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பயோமெட்ரிக் முறை
முதியோரை தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும். 5 கிலோமீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், கூடுதலாக 10 சதவீதம் கூலி வழங்கப்படும். வேலைக்கு வருபவர்களின் வருகை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படும். பணிகள் அனைத்தும் 'ஜியோ-டேக்கிங்' மற்றும் 'ஜி.பி.எஸ்.' தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் திட்டமிடல், கண்காணிப்பு, தணிக்கை மற்றும் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெண் தொழிலாளி நியமனம்
வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர், ஓய்வெடுக்க நிழல் வசதி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் பெண்கள் வேலைக்கு வந்தால், 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களை கவனிப்பதற்காக ஒரு பெண் தொழிலாளி நியமிக்கப்பட்டு அவருக்கும் கூலி வழங்கப்படும். வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், சிகிச்சை, மருந்து, தங்குமிடம் மற்றும் தினசரி உதவித்தொகையும் வழங்கப்படும்.
காப்பீடு உண்டு
உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், அரசு அறிவிக்கும் காப்பீட்டு திட்டங்களின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் 6 மாதங்களுக்கு ஒருமுறை சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும். வருகைப் பதிவேடு, செலவினக்கணக்குகள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இந்த திட்டம் மத்திய - மாநில அரசுகளின் இணைந்த திட்டமாக செயல்படுத்தப்படும். மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை தமிழக அரசும் ஏற்கும். வேலை இழப்பு உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசே வழங்கும்" இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications