பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற முடிவு.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டிய புதிய மாற்றம்
செங்கல்பட்டு: சென்னையில் இருந்து செங்கல்பட்டு நகருக்குள் நுழையும் இடமான பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.இதனை கடந்து தான் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. காலாவதியான இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில் பரனூர் சுங்கச்சாவடியை இன்னும் சில மாதங்களில் அகற்றிவிட்டு தானியங்கி சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகரையொட்டிள்ள மிகப்பெரிய சிக்கலான ஒரு சுங்கச்சாவடி என்றால் பரனூர் சுங்கச்சாவடி தான். சென்னையை ஒட்டியுள்ள இந்த சுங்கச்சாவடியை கடக்காமல் தமிழ்நாட்டின் 80 சதவீத மக்கள் சென்னைக்குள் வரவோ, சென்னையைவிட்டு வெளியே செல்லவோ முடியாது.இந்த சுங்கச்சாவடி அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காலவதியான இந்த சுங்கச்சாவடி எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று கடும் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் சுங்கச்சாவடியை அகற்ற முடியாது என்பதில் மத்திய அரசு உறுதியாகவே நிற்கிறது. இதனா இங்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
இதையடுத்து மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, சுங்கச்சாவடிகளை அகற்றி 'மல்டி லேன் பிரீ ப்ளோ' என்ற முறையில் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.. இதற்காக பரனூர் சுங்கச்சாவடி அருகே வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் காணும் கேமராக்கள் மற்றும் தானியங்கி கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த முறையில் பாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் கட்டண விவரம் அனுப்பப்படும். 72 மணி நேரத்துக்குள் கட்டணம் செலுத்தினால் அபராதம் கிடையாது. தொடர்ந்து கட்டணம் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் நிலுவைத் தொகையுடன் அபராதமும் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த சுங்கச்சாவடி கேமரா, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் இயக்குதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களையும் தானியங்கி கேமராக்கள் பதிவு செய்து அபராதம் விதிக்கும் வகையில் இருக்குமாம்.
இந்த பணியையொட்டி செங்கல்பட்டு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, 8 வழிச்சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். இந்த பணிகள் 4 முதல் 5 மாதங்களில் நிறைவடைந்ததும் பரனூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்றார்கள். இதனிடையே இந்த திட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த மே 19-ந்தேதி பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரனூரில் ஏற்பட உள்ள நடைமுறை சிக்கல்கள்
பாஸ்டாக் இல்லாதவர்களுக்குக் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு 72 மணி நேர அவகாசம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல வாகனங்கள் பழைய உரிமையாளர்களின் பெயரிலேயே ஓடுகிறது. முகவரி மாறியிருக்கும் அல்லது மொபைல் எண் இணைக்கப்படாமல் இருக்கும். அப்படியிருக்க, குறுஞ்செய்தி யாருக்குப் போகும்? அந்த நபர் 72 மணி நேரத்தில் கட்டணம் செலுத்தாவிட்டால், அடுத்தகட்டமாக நோட்டீஸ் அனுப்பி சம்மந்தப்பட்ட நபரைத் தேடிக் கண்டுபிடிப்பது அரசுக்கு தலைவலியாக மாறலாம்.
ANPR கேமராக்கள் வாகன எண்களைப் படம் பிடித்துக் கட்டணம் வசூலிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. தமிழ்நாட்டில் பல வாகனங்களில் எண்கள் தெளிவாக இருக்காது. சிலர் வேண்டுமென்றே நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவது, சேறு பூசுவது அல்லது போலியான நம்பர் பிளேட்டுகளைப் பயன்படுத்துவதும் நடக்கிறது. கேமரா தவறான எண்ணைப் பதிவு செய்துவிட்டால், சம்பந்தமே இல்லாத ஒரு அப்பாவிப் பொதுமகனுக்கு அபராதம் வசூலாகும். இது சிக்கலையே ஏற்படுத்தும்.
சீட் பெல்ட், ஹெல்மெட் மற்றும் அதிவேகத்தைக் கேமராக்கள் கண்காணித்து அபராதம் விதிக்கும் நடைமுறை என்பது சாத்தியம் குறைவானது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேலை சுங்கக் கட்டணம் வசூலிப்பது மட்டுமே. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநிலக் காவல் துறைக்கே உள்ளது. NHAI கேமரா தரவுகளை வைத்து மாநிலப் போலீஸ் எப்படி அபராதம் விதிக்கும் என்ற கேள்விகளும் எழுகிறது.














Click it and Unblock the Notifications