மேயர் பிரியா - சேகர் பாபு மீது வழக்குப்பதிவு.. தவெக அமைச்சருக்கு எதிராக போராடியதால் நடவடிக்கை
சென்னை: தவெக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா சுப்பிரமணியன் உள்பட 400க்கும் அதிகமானவர்கள் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முதல்வர் விஜய் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து ஓடினார்.

இந்த சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளில் தான் தவெக அமைச்சர் சரத்குமார் சர்ச்சையில் சிக்கினார். இவர் தாம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இவர் முதல்வர் விஜய் அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில் தான் அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் பார்க்கும்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டினா். வீடியோவில் சரத்குமார் கிரெடிட் கார்டு ஒன்றை பயன்படுத்தி செல்போன் மீது வைக்கப்பட்ட பொருளை பொடியாக்குகிறார். அது போதைப்பொருள் என்று பலரும் குற்றம்சாட்டினர்.
இதற்கு அமைச்சர் சரத்குமார் அளித்த விளக்கத்தில், ஐபிஎல் போட்டிக்கு சென்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கியதாகவும், தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்நிலையில் தான் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அதன்படி அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே தான் நேற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாட்டில் அனைத்து தலைநகரங்களிலும் அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்தது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்திற்கு மேடை அமைக்க திமுகவினர் அனுமதி கோரியும் போலீசார் வழங்கவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்பட திமுக நிர்வாகிகள் தடையை மீறி போராட்டம் நடத்தினர்.
அதேபோல், போலீசார் அனுமதி கொடுக்காததை கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் திமுக மாணவர் அணியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் தான் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் சேகர் பாபு, மா சுப்பிரமணியன் உள்பட 400க்கும் அதிகமான திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூரில் நடந்த போராட்டத்தில் மா சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீதும், புரசைவாக்கத்தில் நடந்த போராட்டத்தின்போது மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்பபட 200க்கும் மேற்பட்டவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் உள்பட 3 பிரிவுகளில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications