தவெகவில் இணையும் 5 மாஜி அமைச்சர்கள், 8 எக்ஸ் எம்எல்ஏ, 10 மாவட்டச் செயலாளர்கள்.. காலியாகும் அதிமுக!
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த இரு விஜயபாஸ்கர் உட்பட 5 முன்னாள் அமைச்சர்கள் நாளை மறுநாள் நடக்கவுள்ள இணைப்பு விழாவில் தவெகவில் ஐக்கியமாக இருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் 8 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் 10 மாவட்டச் செயலாளர்களும் தவெகவில் இணைகின்றனர். இதனால் அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஜூலை 2ஆம் தேதி தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மிக முக்கிய நாளாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பை ஆட்டம் காண செய்யும் வகையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாக இருக்கின்றனர். ஏற்கனவே சி விஜயபாஸ்கர் மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் இருவருமே தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

இவர்கள் இருவரின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் முதல்வர் விஜய் முன்னிலையில் இரு விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய இருக்கின்றனர். இருவருமே பனையூர் அலுவலகம் அல்லாமல் முதல்வர் விஜய் முன்னிலையில் இணையவே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ஜூலை 2ஆம் தேதி நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தார்.
இந்த நிலையில் சென்னை ஈசிஆரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் இணைப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இரு விஜயபாஸ்கர் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 8 முன்னாள் எம்எல்ஏ-க்களும் தவெக பக்கம் சாய இருக்கின்றனர்.
அதேபோல் 10 மாவட்டச் செயலாளர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகின்றனர். இதன் காரணமாக இந்த இணைப்பு விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. 200 பேருந்துகள், 600 கார்களில் ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவின் அடிமட்ட கட்டமைப்பே ஆட்டம் காண உள்ளது.
புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் இருந்து பெருவாரியான அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகளும் இருக்கக் கூடும் என்று தெரிகிறது. குறிப்பாக முன்னாள் எம்எல்ஏ அருள் இணையக் கூடும். இதனால் தவெகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications