நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்? கேஸ் போடுவேன்! பிரஸ் மீட்டில் வெடுக்கென எழுந்த வைகோ
சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியால் மதிமுக நிறுவனர் வைகோ கொதித்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மதிமுக வைகோ செய்தியாளர்களை செங்கல்பட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பில் மதிமுக - தவெக கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்து வந்த வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இதில் வரிசையாக 12 தேர்தலில் அந்த கூட்டணி வென்றது. ஆனால் ஒரே ஒரு தோல்வியால் தற்போது மதிமுக கூட்டணியை மாற்றிக்கொண்டது.

ஒரே ஒரு தோல்வியால் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக மதிமுக வெளியேறியுள்ளது. சென்னையில் ஜூன் 27, 2026 அன்று நடைபெற்ற மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதோடு தவெக உடன் கூட்டணி வைப்பது பற்றியும் மதிமுக முடிவு எடுக்க உள்ளது.
கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இனிவரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு மதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் வைகோ சந்திப்பும் நடத்தினார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு மதிமுக பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவை தங்களது சுயேச்சை சின்னத்தில் போட்டியிட விடாமல், திமுகவின் "உதயசூரியன்" சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதாக மதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது கட்சியின் தனித்துவத்தை சிதைக்கும் முயற்சி என்று பொதுக்குழுவில் நிர்வாகிகள் கடுமையாக சாடினர்.
கட்சியை காக்க வேண்டும்
மேலும் சட்டமன்றத் தேர்தலில் வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அதிமுக தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க, திமுக சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டதாக மதிமுகவின் முதல் தீர்மானத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கட்சியை காக்க வேண்டும்.. கட்சியின் எதிர்காலத்தை காக்க வேண்டும் என்று இப்படி செய்ததாகவும் விஜய் துரை வைகோ குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியால் மதிமுக நிறுவனர் வைகோ கொதித்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று செய்தியாளர் சந்திப்பில், கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது.. ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது.. ஆனால் இப்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அப்படி இல்லை.. விஜய் அதை எல்லாம் உடைத்துவிட்டார் என்று கூறினார். இதையடுத்து அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
நான் கூட்டணியில் இருக்கும் போது எப்படி பேச முடியும்.. வெளியே வந்துதான் பேச முடியும்.. நீங்கள் திட்டமிட்டு கேள்வி கேட்பது போல தெரிகிறது.. நீங்க எந்த பத்திரிகை சார்.. சொல்லுங்கள்.. பதில் சொல்லுங்க.. நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. வெளியே போ என்று வைகோ கடுமையாக கேள்வி எழுப்பினார்.
அதோடு கோபமாக வைகோ அப்படியே சீட்டில் இருந்து வெடுக்கென்று எழுந்தார். இதையடுத்து அந்த செய்தியாளரை அப்படியே சுத்துப்போட்ட மதிமுகவினர்.. வைகோவிடம் நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று சரமாரியாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications