"எங்கே போறோம்"னு கேட்ட 5 வயது சாய் தீப்தி! அதுவா.. குழந்தையை தூக்கி கிணற்றில் வீசி கொன்ற அத்தை!
மதுரை: வீட்டில் தூங்கிய சிறுமியை தூக்கிச் சென்ற அத்தை, அந்த சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொன்றது யார், ஏன் கொன்றார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மதுரை பைகாரா பகுதியில் முத்துராமலிங்கபுரம் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாலகணேஷ் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகை செல்வி (28).

இவர்களுக்கு சாய் தீப்தி, சாரு நித்திகா (5) என்ற இரட்டை பெண் குழந்தைகள். சம்பவத்தன்று கார்த்திகைசெல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள தந்தை முத்துமுருகன் வீட்டுக்குச் சென்றாராம்.
அப்போது நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தியை திடீரென காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது அங்கிருந்த பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிறுமி மிதந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை இப்படி மிதப்பதை பார்த்து நெஞ்சே வெடித்தது போல் தாய் கார்த்திகை செல்வி அழுதது காண்போரை பதறச் செய்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் , சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனையில் முதல்கட்ட தகவலின்படி சிறுமி கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து விசாரணையை போலீஸார் முடுக்கிவிட்டனர். இதையடுத்து வீட்டில் இருந்தவர்களை விசாரித்தனர். அதில் கார்த்திகைசெல்வியின் தம்பி அஜித்குமாரின் மனைவி சபரிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியிருந்தார். அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணை நடத்தியதில் அவர்தான் இந்த கொலையை செய்தார் என்பது தெரியவந்தது.
இந்த கொலையை செய்தது ஏன் என்பது குறித்து சபரிகா போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம். "நான் கல்லூரியில் படித்த போது உறவினர் மகனான அஜித்குமாரை காதலித்தேன். இந்த காதலை அஜித்குமார் வீட்டினர் ஏற்கவில்லை.
இதனால் அஜித்குமார், என்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது மாமியார் பூமாதேவிக்கு என்னை பிடிக்கவில்லை. தனது மகனுக்கு பணக்கார இடத்தில் பெண் பார்க்க திட்டமிட்டிருந்த நிலையில் எங்கள் திருமணம் பூமாதேவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் என் மீது மாமியாருக்கும் நாத்தனார் கார்த்திகை செல்விக்கும் கோபம் இருந்தது. என்னிடம் வாய் வார்த்தை கூட பேச மாட்டார்கள். இந்த நிலையில் எனக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்துவிட்டதால் குடும்பத்தினரிடம் அந்த குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது. மேலும் கார்த்திகை செல்வி ஊருக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டில் பிரச்சினை வந்தது. என் குழந்தையை யாரும் கொஞ்சாமல் அவரது குழந்தையை அனைவரும் கொஞ்சினர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நாத்தனாரின் இரு குழந்தைகளும் அழகாக இருப்பதால்தானே என் குழந்தை மீது மாமியார், நாத்தனார் உள்ளிட்டோர் வெறுப்பை கக்குகிறார்கள் என நான் நாளுக்கு நாள் நினைத்தேன்.
மேலும் நாத்தனார் குழந்தைகளுக்கு காதணி விழாவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது என் வீட்டுக்காரர் தாய்மாமன் சீர் செய்வதற்காக எனது நகைகளை தருமாறு என் மாமியார் கேட்டார். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு கார்த்திகை செல்வி எங்கள் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போதும் எனது மாமியார் அவரது குழந்தைகளை பாசமாக கவனித்துக் கொண்டார். இதனால் அந்த குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அப்போது வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சாய் தீப்தியை நான் தூக்கிக் கொண்டு வந்தேன். ரயில் தண்டவாளம் பகுதிக்குச் சென்ற போது சாய் தீப்தி கண் விழித்துக் கொண்டு, அத்தை எங்கே செல்கிறோம் என கேட்டாள். அதற்கு நான் "ஒன்றுமில்லை நீ தூங்கு" என தோளில் போட்டு தட்டிக் கொடுத்தேன்.
அப்போது நாய்கள் குரைத்ததால், நான் மீண்டும் வீட்டுக்குச் செல்லலாம் என திரும்பினேன். வீட்டிற்கு சென்றால் சாய் தீப்தியை நான் கொண்டு சென்றது எல்லாருக்கும் தெரிந்து விடும் என்பதால் வீட்டின் அருகே இருக்கும் கிணற்றில் வீசிவிட்டேன். அவள் தண்ணீரில் தத்தளித்தாள், நான் அதை பார்த்து வீட்டிற்கு சென்றுவிட்டேன். இவளது உடல் கிடைத்தால் போலீஸார் அக்கம்பக்கத்தினரைதான் சந்தேகிப்பார்கள் என நினைத்தேன். தற்போது நான் மாட்டிக் கொண்டேன் என்றார்.
இதையடுத்து சபரிகாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications