அப்ப தான் பதவியேற்றார் மாணிக்கம் தாகூர்..அதுக்குள்ளயே? ராகுலுக்கு 65%.. மோடிக்கு 35 மார்க் கூட தேறாது
சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்திக்கு எந்த சர்வே எடுத்தாலும் சரி. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 60லிருந்து 65 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எதிர்த்தரப்பில் மோடிக்கு 35 மார்க்கு கூட வராது.. ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்? என்று புதிய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பியுள்ள இந்த கேள்வி, தமிழக அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க, மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எனப் பெரும் பட்டாளமே இந்த விழாவில் ஆஜராகியிருந்தது.

புதிய காங்கிரஸ் தலைவர்
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் தற்போதைய அரசியல் சூழலில், இந்த பதவியேற்பு விழா ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தின் கழுகுப்பார்வையையும் தன் பக்கம் ஈர்த்திருந்தது.
மேடையில் மைக் பிடித்த புதிய தலைவர் மாணிக்கம் தாகூர், தொண்டர்களுக்குள் இருக்கும் ஈகோவை தட்டி எழுப்பும் வகையில் மிக முதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆக்ரோஷமாகவும் பேசினார்.
மாணிக்கம் தாகூர் பேச்சு
"காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டுமானால் நம்முடைய ஈகோவை விட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து வேலை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரைக்கும், வாய்க்கால் சண்டையா, வரப்பு சண்டையா?. என்ன? காங்கிரசை யார் அடித்தாலும் திருப்பி அடிப்பேன். எங்களை தொட்டால் விடமாட்டோம். ராகுல்காந்தி தான் எங்கள் முகம். அவர் தான் எங்கள் எதிர்காலம். ராகுல் காந்தியால் மட்டும் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் எழுச்சி பெறும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் எல்லாம் ஒரு கருவி தான். ராகுல் காந்தி பிரதமராக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர வேற ஒன்றும் நமக்கு தேவை இல்லை.
தவெக கூட்டணியில் நாம் இருக்கிறோம். நம்முடைய அமைச்சர்கள் பங்கும் இருக்கிறது. நாம் இந்த கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். எப்படி கூட்ட முடியும்?
ராகுல் காந்தி - மோடி
தமிழகத்தில் ராகுல்காந்திக்கு எந்த சர்வே எடுத்தாலும் சரி. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 60லிருந்து 65 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எதிர்த்தரப்பில் மோடிக்கு 35 மார்க்கு கூட வராது.. ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பது தான் கேள்வி. தேடல் என்பது விஜய்க்கு 32 முதல் 35 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது. ராகுலுக்கு 65 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. இந்த ஆதரவை நாம் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்க வேண்டும்.
விஜய்யை நம்பி எப்படி அந்த கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ?. அதேபோல் ராகுல்காந்தியை நம்பி தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும். எல்லாரும் ராகுல்காந்தியை தான் முன்னிறுத்த வேண்டும். இந்த தேர்தல் உழைக்கக்கூடிய காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய ஒரு அரசியலை மாற்றி இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. 2029ல் ராகுல் பிரதமாக வர வேண்டும் என்பது தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்" என்றால்ர.
விஜய்யின் வாக்கு வங்கி
மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு, தமிழ்நாட்டில் காலங்காலமாக நிலவி வரும் காங்கிரஸின் உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுவதாக தெரிகிறது.. அதேசமயம், தேசிய அளவில் ராகுல் காந்திக்கு இருக்கும் செல்வாக்கையும், மாநில அளவில் விஜய்யின் வாக்கு வங்கியையும் ஒப்பிட்டுப் பேசியிருப்பது மிக நுணுக்கமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
தவெக கூட்டணியில் அமைச்சரவை பங்கோடு நீடிக்கும் காங்கிரஸ், விஜய்யின் பலத்தை அங்கீகரிக்கும் அதேசமயம், தங்களின் தேசிய முகமான ராகுல் காந்தியின் செல்வாக்கு தமிழகத்தில் இன்னும் ஒரு படி மேலேதான் இருக்கிறது என்பதை நாசூக்காகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார்.
ராகுல் காந்திக்கு இருக்கும் இந்த மறைமுக ஆதரவை, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியின் நேரடி வாக்கு வங்கியாக மாற்றுவதே புதிய தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முன்னால் இருக்கும் அக்னிப்பரீட்சையாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications