குழந்தை நீதி கதைகள்: இந்த உணவுதான் பெஸ்ட்.. சிறந்த சமையல்காரரை கண்டுபிடித்தாரா?
சென்னை: Kids story in Tamil:
ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. விடுமுறையை எப்படி கொண்டாடிட்டு இருக்கீங்க. உங்க நண்பர்களுடன் விளையாடி ஜாலியா இருங்க. சரி உங்களுக்கு ரொம்ப புடிச்ச உணவு எது? நம்ம கதையில் சிறந்த உணவை கண்டிபிடிச்சாங்களானு படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
ராஜ்ஜியத்தில் அரசர் நன்றாக ஆட்சி புரிந்து வந்தார். மக்களும் அவரது ஆட்சியில் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். திடீரென அரசருக்கு ஒரு சிந்தனை, அவருக்கு இந்த உலகத்தின் சிறந்த உணவை உண்ணவேண்டும் என்று தோன்றியது. உடனடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தார். உலகில் தலை சிறந்த உணவை யார் தருகிறார்களோ அவர்களுக்கு பொற்காசுகள் கொடுக்கப்படும் என்றார்.

இதை கேள்விப்பட்ட சமையல்காரர்கள் குஷி ஆனார்கள். நாடெங்கிலும் இந்த செய்தி பரவ ராஜ்ஜியத்தை நோக்கி சமையல்காரர்கள் புறப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகி முதல் நாள் ஒருவர் அரசருக்கு ராஜ போக உணவை அளிக்கிறார். அதை உண்ட அரசருக்கு இது நான் எப்போதும் சாப்பிடும் உணவு போலத்தான் இருக்கிறது என தோன்றியது. இல்லை இது சிறந்த உணவு இல்லை என அந்த சமையல்காரரை புறக்கணித்தார்.
மறுநாள் வேறு நாட்டில் இருந்து சமையல்காரர் வந்தார். அரசருக்கு பிடித்த உணவை கேட்டு வைத்து கொண்டு அதை அவரது பாணியில் செய்து அசத்தினார். ஆனால் அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. வரிசையாக ஒவ்வொரு நாட்டில் இருந்து சமையல்காரர்கள் வந்தார்கள். யாராலும் அரசர் எதிர்பார்த்த உணவை கொடுக்க முடியவில்லை.
அந்த ராஜ்ஜியத்தை சுற்றி பார்க்க வந்த வாலிபன் ராஜு. இந்த போட்டியை கேள்விப்பட்டு அவனும் கலந்து கொள்ள முடிவு செய்தான். அரசரிடம் சென்றான். அவர் என்ன உணவு கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்க இல்லை அரசே, நான் தயாரிக்கும் உணவை நீங்கள் சாப்பிட வேண்டுமானால் 3 நாட்கள் தண்ணீரை தவிர வேறு எதையும் உணவாக எடுத்து கொள்ள கூடாது அதை சொல்லத்தான் வந்தேன் என்றான் ராஜு. அதிரிச்சி ஆனார் அரசர். இருந்தாலும் சிறந்த உணவை சாப்பிடுவதற்காக நான் இதை செய்கிறேன் என்று ஒப்பு கொண்டார்.
ராஜு சொன்னது போல மூன்று நாள் கழித்து அரசரை காண சென்றான். அரசர் பசி மயக்கத்தில் இருந்தார். 3 நாள் சாப்பிடாத மயக்கத்தில் இருந்ததால் அவசரமாக அந்த சிறந்த உணவை கொடு என்றார் அரசர். ராஜு ஒரு பாத்திரத்தில் வெறும் வெள்ளை சாப்பாடு மற்றும் உப்பை கொடுத்தான். அரசர் இருந்த பசியில் அதை சாப்பிட்டு முடித்தார். அப்பப்பா அருமையான உணவு என்றார் அரசர். ராஜு சரி அப்போ நான் சிறந்த சமையல்காரன் என்பதை ஒப்புக்கொண்டு பரிசுகளை தாருங்கள் என்றான். கோபப்பட்ட அரசர் நீ என்னை ஏமாற்றி விட்டாய், பசி மயக்கத்தில் இருந்த என்னிடம் வெள்ளை சாதத்தை கொடுத்தாய் என்றார்.
ராஜு குறுக்கிட்டு நீங்கள் சிறந்த உணவு வேண்டும் என்று சொன்னீர்களே தவிர அந்த உணவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் நீங்கள் சொல்லவில்லை. மேலும் தினமும் வித விதமான உணவுகளை நீங்கள் தேர்வு செய்து சாப்பிட்டதால் உங்களுக்கு சிறந்த உணவு எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சொன்னது போல் நீங்கள் உணவை எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்ந்ததால் இந்த சாதம் கூட உங்களுக்கு அமிர்தமாக தெரிந்தது. அது நீங்கள் சாப்பிட்ட விதத்தை வைத்தே சொல்லலாம் என்றான்.

ஒரு நொடி மெய்மறந்த அரசர் உண்மையை ஒப்புக்கொண்டார். ராஜுவின் அறிவை கண்டு அவனை தனது அரசவையில் ஒரு மந்திரியாக அமர வைத்தார். ராஜுவும் அதை சந்தோஷமாக ஏற்று கொண்டான்.
ஆகையால் குழந்தைகளே ஒரு பொருளின் அருமை அது நம்மிடம் இல்லாமல் இருக்கும்போது தான் தெரியும். அது உணவாக இருக்கலாம், உங்கள் நண்பர்களாக இருக்கலாம் முடிந்தவரை அதன் மதிப்பை உதாசீன படுத்தாதீர்கள்.












Click it and Unblock the Notifications