என்ன கொடூரம் இது.. 15 வயது சிறுவன் ஓட ஓட வெட்டிக் கொலை.. நண்பர்களே போட்ட "ஸ்கெட்ச்" - பரபர பின்னணி
முதல்கட்ட விசாரணையில், ரோகித்துக்கும், அவரது நண்பர்களுக்கும் இன்று காலை கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
பெரம்பலூர்: பெரம்பலூரில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
15 வயதே ஆன ஒரு சிறுவனை ஒரு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. அவனது நண்பர்களே இந்தக் கொலையை செய்திருப்பது தற்போது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஏதோ ரவுடிகளுக்கு இடையே நடக்கும் பழிக்கு பழிவாங்கல் கொலையை போல, சின்னஞ்சிறு சிறார்கள் அரங்கேற்றியிருக்கும் இந்தக் கொலையை பாரக்கும் போது நமது இளைய சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

வன்முறைப் பாதையில் இளைஞர்கள்
நாட்டில் தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பள்ளியில் படிக்கும் போதே, போதைப் பழக்கங்களுக்கு சில மாணவர்கள் உள்ளாகி விடுகிறார்கள். இது, அவர்களின் மனதில் வன்முறை எண்ணத்தை விதைத்து, சில குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபடவும் காரணமாகி விடுகிறது. வீட்டிலும், பள்ளியிலும் பெரிய அளவில் கண்டிப்பு இல்லாததால் அவர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதும் சிரமமாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட திருச்சியில் 10-ம் வகுப்பு மாணவனை அவனுடன் படிக்கும் சக மாணவர்களே அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.

15 வயது சிறுவன்
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, திருச்சிக்கு அருகிலேயே மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரோகித் (15). 9-ம் வகுப்பு படித்து வந்த இவர், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரோகித்துக்கு அந்தப் பகுதியில் அதிகப்படியான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

விரட்டி விரட்டி..
இந்நிலையில், இன்று மாலை இந்திராநகரில் உள்ள ஒரு கோயில் அருகே ரோகித் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த மர்ம கும்பல், கையில் அரிவாள், கத்தியுடன் ரோகித்தை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்து பயந்து போன ரோகித், அங்கிருந்து ஓடினார். ஆனால், விடாமல் விரட்டிச் சென்ற அந்த கும்பல் ரோகித்தை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனிப்படை அமைத்த போலீஸ்
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகர போலீஸார் அங்கு வந்து ரோகித்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், ரோகித்துக்கும், அவரது நண்பர்களுக்கும் இன்று காலை கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், இன்று மாலையே ரோகித்தை கொலை செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமறைவாகியுள்ள அவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications