காதல் மன்னன் ஷாஜகானின் தாஜ்மஹால் திரைப்படமாகிறது
ஹைதராபாத்: பலமுறை, பல மொழிகளில் படமாக்கப்பட்ட மொகலாய பேரரசர் ஷாஜகான்- மும்தாஜின் காதல் கதை மீண்டும் திரைப்படமாகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மறைந்த பிரபல திரைப்படத் தயாப்பாளர் மற்றும் முன்னாள் எம்.பி.யான சுப்பராமி ரெட்டியின் படநிறுவனம் இத்திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது.
தன் காதலி மேல் வைத்த அளவுக்கதிகமான அன்பின் சின்னமாய் தாஜ்மஹால் கட்டி அதை அவளுக்குப் பரிசளித்து தன் காதலின் ஆழத்தை நருபித்தவர் மன்னர் ஷாஜகான்.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் கதை தற்போது திரைப்படமாகிறது.
இத்திரைப்படத்தில் மொகலாய பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்தாஜின் காதல் கதை மையக்கருவாக இருக்கும். மேலும் உலக மக்களால் காதல் மன்னன் என்று முத்திரை குத்தப்பட்ட ஷாஜகான் தன் காதலின் நினைவுச் சின்னமாக ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டியது பற்றி விரிவாக படமெடுக்கப்படும்.
இந்தக் கதைக்கு பாத்திமா, அக்பர் கான் ஆகியோர் கதை, திரைக்கதை எழுத, ஹைதர் வசனம் எழுதுகிறார். இப்படம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைப்படமாகிறது. மேலும் படநிறுவனத்தார் இப்படத்தை டி.வி.தொடராக எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பை ஜெய்ப்பூர், ஆக்ரா, ஜோத்பூர் ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.