தமிழகத்தில் இன்று
சென்னை:
திருபுவனத்தில் திமுக தொண்டருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தமாகா தொண்டர்மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
சட்டசபையில் வியாழக்கிழமை அன்று இப்பிரச்னை பற்றி தமாகா உறுப்பினர் ஞானசேகரன், இந்திய கம்யூனிஸ்ட்உறுப்பினர் சிவபுண்ணியம், அதிமுக உறுப்பினர் தாமரைக்கனி, திருபுவனம் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம்ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, ""இச்சம்பவம் 4.5.2000 அன்று நடந்துள்ளது. திருபுவனம் பட்டுக்கூட்டுறவு சங்க கட்டடம் முன்பு திமுக தொண்டர் குமார் என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவருடன்தமாகா தொண்டர் அரிதாஸ் என்பவர் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதற்கு 4 நாட்களுக்கு பிறகு அரிதாசின் அண்ணன் சுந்தரமூர்த்தி, திருவிடைமருதூர் போலீசில் புகார்செய்துள்ளார். தனது தம்பியை அடையாளர் தெரியாத சிலர் கடத்திச் சென்று விட்டதாக கூறினார்.
அதற்கு அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள குட்டையில் அரிதாசின் பிணம் கிடந்துள்ளது. உடலில் பெரியகாயங்கள் இல்லை. சிராய்ப்புகள் மட்டுமே இருந்ததால், சந்தேகத்திற்குரிய மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை. ஆனால், கொலை சம்பவம் என்று கூறி சாலை மறியல்போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற போராட்டங்கள் மூலம் நல்லவர்கள் கைது செய்யப்படக் கூடிய நிலைமைஏற்படும் என்பதை போராடியவர்களும், தூண்டி விட்டவர்களும் உணர வேண்டும். எனினும் இச்சம்பவத்தில்பாரபட்சம் பார்க்காமல் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications