தமிழகத்தில் இன்று
தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது: யஷ்வந்த் சின்ஹா
கோவை:
தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சியை யாரும் உடைக்க முடியாது என்று மதிமுக பேரணியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ஈரோட்டில் ம.தி.மு.க நடத்தும் தமிழக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசியதாவது:
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போர்ச்சுகல் நாட்டில் பிரதமர் வாஜ்பாயுடன் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தேன். இந்தப் பயணத்தை அவசரஅவசரமாக முடித்துக் கொண்டு, நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள 3 காரணங்கள் உண்டு. முதலாவது, வைகோ எனது நீண்ட நாளைய நெருங்கிய நண்பர். இரண்டாவது, தேசிய ஜனநாயகக்கூட்டணியின் தூணாக விளங்குபவர். 3வது, தமிழக மக்கள் மீது நான் கொண்டுள்ள நேசம். இவைதான் இந்த மாநாட்டில் என்னைக் கலந்து கொள்ளவைத்துள்ளது. எப்போதும் அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சராக வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பர்.
ஆனால், வைகோ அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறி மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்பவர். பார்லிமென்டில் முக்கிய நிகழ்ச்சிகள்நடக்கும்போதும், எதிர்க் கட்சியினரை வாயடைக்கச் செய்ய வேண்டுமானாலும் நான் வைகோவைத் தான் பேச அழைப்பேன். வைகோ தான் தேசியஜனநாயகக் கூட்டணியின் பக்கபலமாக இருந்து செயல்பட்டு வருகிறார்.
வெளிநாடாக இருந்தாலும் சரி, உள்நாடாக இருந்தாலும் சரி நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னிடம் ஒரு கேள்வி வருவதுண்டு. கூட்டணி ஆட்சியைவைத்துக் கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் எனக் கேட்கின்றனர். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், கூட்டணி ஆட்சிதான் எனது பலம்என்பேன்.
கடந்த ஆட்சி காலத்தில் நான் பொறுப்பேற்றபோது, இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது கிழக்கு ஆசிய நாடுகளில்பொருளாதார நெருக்கடி நிலவியது. பிரதமர் வாஜ்பாய் அணு ஆயுதச் சோதனை நடத்தினார். இதனால் பல பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
விவசாயத்தில் வெங்காயம் உருளைக் கிழங்குகளின் விலை வீழ்ச்சியடைந்திருந்தது. இந்த சமயத்தில்தான் சென்னையிலிருந்து வந்த அந்த அம்மையார் ஆட்சிக்கேநெருக்கடியை உண்டாக்கினார். அதேசமயத்தில் அண்டை நாடான பாகிஸ்தான் கார்கில் போரை தொடுத்தது. இவ்வளவு தடைகளையும் மீறி தற்போது நாம்முன்னேறி வருகிறோம்.
பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும் நாடு என சர்வதேச நாடுகள் பாராட்டும் அளவிற்கு நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.இதற்கு வாஜ்பாயின் அறிவுசார்ந்த தலைமை தான் காரணம். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பாறையைப் போன்ற வலிமையான கூட்டணி. இதனையாராலும் உடைக்க முடியாது.
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா பேசினார்.












Click it and Unblock the Notifications