தமிழகத்தில் இன்று
மாஸ்கோ விமான நிலையத்தில் அவதிப்படும் இந்தியப் பயணிகள்
மாஸ்கோ:
மாஸ்கோ விமான நிலையத்தில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் பல்வேறு விதங்களில் அவமானப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. பலர், நீண்ட நேரம் தங்களைத் தேவையில்லாமல் காக்க வைப்பதாககூறியுள்ளனர். வாரத்திற்கு ஒருமுறை இதுபோன்ற புகார் வருவதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் இந்தியாவிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள், மாஸ்கோவின் ஷெர்மடோவ்-2 சர்வதேச விமான நிலையத்தில் காக்கவைக்கப்பட்டனர். இதுதொடர்பாக இந்திய வர்த்தகக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷியாவுக்குப் பல ஆண்டுகளாக சென்று வரும் வர்த்தகர்கள் கூட இதுபோல காக்க வைக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது என்ற இந்தக் கழகம்கூறியுள்ளது. இதேபோல, மாஸ்கோவில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்களும் அவமானப்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது.
உமா ராவ் என்ற வர்த்தகர், ரஷியாவிற்கு கடந்த 15 ஆண்டுகளாக புகையிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சமீபத்தில்மாஸ்கோ வந்தபோது, விமான நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டார். இந்தியத் தூதரகத்தின் தலையீட்டின்பேரில்தான் அவர் விடுவிக்கப்பட்டார்.
விமான நிலையத்தில் காக்க வைக்கப்படும் பயணிகள் எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதிலலை. டாய்லட்டிற்கோ அல்லது சாப்பிடவோ அனுமதிதருவதில்லை. தண்ணீர் குடிக்கக் கூட அனுமதி கிடையாது.
செச்னியால் போர் உக்கிரமடைந்தவுடன், மாஸ்கோ வரும்இந்தியப் பயணிகளின் நிலையும் மோசமடைந்தது. செச்னியாவிற்குள், உலகின் பல்வேறுபகுதிகளிலிருந்தும் தீவிரவாதிகள் ஊடுறுவும் அபாயம் இருந்ததால், விமான நிலையங்களில் ரஷிய அதிகாரிகள் விசா கட்டுப்பாட்டை அதிகப்படுத்தினர்.இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியப் பயணிகள்தான்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் மாஸ்கோ வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம், இந்திய வர்த்தகர்கள் கழகம் புகார் கொடுத்தது.மனுவில், மாஸ்கோ விமான நிலையத்திற்கு வரும் இந்தியப் பயணிகள் தேவையில்லாமல் பல மணி நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலுள்ள ரஷிய தூதரகம் வழங்கும் முறையான விசாவுடன் ரஷியா வரும் இந்தியப் பயணிகள் எந்தவித விசாரணையுமின்றி அனுமதிக்கப்படவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.