பெண் ஊழியர் கழுத்தை அறுத்த ஐடி ஊழியர்.. அத்தோடு விடவில்லை.. பறிபோன 2 உயிர்கள்
டெல்லி: குருகிராமில் ஒரே ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 25 வயதான ஐடி ஊழியர் ஒருவர் தன்னுடன் வேலை செய்து வந்த பெண் ஊழியரைக் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். பிறகு அவரும் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், விசாரணையில் மேலும் பல பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளனர்.
இப்போதெல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட மோசமான விபரீதமான முடிவுகளை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு நொடி பொறுமையை இழப்பதால் உயிரே போகும் மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் குருகிராமில் நடந்துள்ளது.

என்ன நடந்தது!
அங்கு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 25 வயதான ஊழியர் ஒருவர் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஊழியரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும், அவரும் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "உயிரிழந்த இருவரும் ஓராண்டாகவே ஒரே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அவர்களின் ஐடி நிறுவனம் செக்டர் 59ல் உள்ளது.. கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 1.30 மணியளவில் குருகிராம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் முதலில் அந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது" என்றார்.
பகீர் தகவல்
ரயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் முதலில் விபத்து என்றே நினைத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவரது உடலில் இருந்த ஆவணங்கள் மூலம் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமையே குருகிராமுக்கு வந்து உடலை அடையாளம் கண்டனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை பார்க்க சென்ற குடும்பத்தினர், பின்னர் அவர் தங்கியிருந்த செக்டர் 55 பகுதியில் உள்ள விடுதிக்கு சென்று கொண்டு இருந்தனர். போலீசாரும் அந்த ஐடி ஊழியரின் குடும்பத்தினரும் இணைந்து அவரது விடுக்கு சென்றுள்ளனர். அறை பூட்டப்பட்டு இருந்ததால்.. அதை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
பெண் கொலை
அங்கு கண்ட காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெண் ஊழியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றிய அதிகாரிகள், உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளை தொடர்புகொள்ள முடியவில்லை என சொல்லி போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். அந்த பெண் வேறு ஒரு விடுதியில் தங்கியிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்புதான் தனது ரூமை காலி செய்துவிட்டு ஆண் ஊழியரின் தங்கும் இடத்திற்கு சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி மேலும் கூறுகையில், "இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. சம்பவத்திற்கு முன் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் சேகரித்து வருகிறோம்" என்றார்.
யார் அவர்?
உயிரிழந்த இளைஞர் ராய்ப்பூரில் உள்ள என்ஐடியில் பட்டம் பெற்றவர். சாம்சங் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்த அவர், குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் 8ஆம் தேதி தனது பிறந்தநாளை சொந்த ஊரில் கொண்டாடிய அவர், ஜூன் 16ஆம் தேதி மீண்டும் குருகிராமுக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு ஒரு மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருவரின் செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட சாதனங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இருவரது மரணம் குறித்தும் விசாரணை நடந்து வரும் நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பிறகே மர்மம் விலகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications