தமிழகத்தில் இன்று
6 அல்ல 19 டி.எம்.சி. என்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 19 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட ஒப்புதல் அளித்துள்ளது. பத்திரிகைகளில் வெளியானது போல 6 டி.எம்.சி. அல்ல என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
டெல்லியில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு சனிக்கிழமை இரவு சென்னை திரும்பிய முதல்வர் கருணாநிதி விமானநிலையத்தில்நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நானும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சுமூகமான முறையில் பேசினோம். கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு 6 டி.எம்.சி.தண்ணீர் திறந்து விடுவதற்குஒப்புக்கொண்டுள்ளதாகப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் தவறு.
காவிரி இடைக்கால நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டியது 205 டி.எம்.சி. தண்ணீர். இதில் ஜூன் மாதம் 7.5 டி.எம்.சி,.யும், ஜூலைமாதம் 13 ம் தேதி வரையில் 19 டி.எம்.சி.யும் தர இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 6 டி.எம்.சி. தண்ணீர் பாண்டிச்சேரிக்கு தமிழகம் கொடுக்க வேண்டும். மழை என்பது அனைவருக்கும் பொதுவானது. அதுபெய்தால்தான் தண்ணீர்அளிக்க முடியும். எனவே நாம் இதில் வெற்றி பெற்றுவிட்டோம். கர்நாடகம் தோல்வி அடைந்து விட்டது என்று பேசுவதெல்லாம் தவறு.
தகவல் தொழில்நுட்பம் பற்றிய கூட்டத்திலும் நான் கலந்து கொண்டேன். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பொதுவான திட்டம்வகுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் சார்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஏற்கப்பட்டு, திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.
கர்நாடக முதல்வர் மெளனம்:
இதற்கிடையே, தமிழகத்திற்கு, கர்நாடகம் 19 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும். பத்திரிக்கைகளில் 6 டி.எம்.சி.நீர் திறந்து விடப்படும் என்றுவெளியாகியுள்ள செய்தி தவறு என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டபோது, தமிழகத்திற்கு தண்ணீர்திறந்து விடுவோம் என்று மட்டும் கூறினார்.
அவர் கூறுகையில், காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்புப்படி, தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படும். விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாதவாறு இப் பிரச்சனைதீர்க்கப்படும்.
நாங்கள் தற்போது மழையை நம்பியுள்ளோம். கண்டிப்பாய் மழை வந்து காப்பாற்றும் என்று நம்புகிறேன்.கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பருவமழை பொய்க்காது என்று வானிலைஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.