தமிழகத்தில் இன்று
சீன கால்பந்து ரசிகர்களின் 5 மணி நேர "அமர்க்களம்
பீஜிங்:
உள்ளூர் கால்பந்து அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்புத் தர ரெப்ரீ மறுத்துவிட்டதை அடுத்து ரசிகர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். கார்கள் மீது கல்வீச்சுநடத்தினர். ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
சீனாவின் வட பகுதியில் உள்ள ஸியான் நகரில் இச் சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றது.
சீனாவில் 2-ம் கட்ட கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஷாங்ஸி கோலியும்செங்க்டு உனியு அணியும் மோதின.
ஆட்டம் முடியும் தருவாயில் செங்க்டு உனியு அணியினரின் தவறான ஆட்டத்தால் ஷாங்ஸி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க இருந்தது. ஆனால்,பெனால்டி கிக் வாய்ப்புத் தர ரெப்ரீ மறுத்துவிட்டார். கடைசியில் அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து ஷாங்ஸி அணியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து செங்க்டு உனியு அணி ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் மைதானத்தைவிட்டு வெளியே வந்த அவர்கள் கார்கள் மீது கற்களை வீசித் தாக்கினர்.
கடைகளின் பெயர்ப் பலகைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். சுமார் 5 மணி நேரம் அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ரகளையின் உச்சக்கட்டமாகஅங்கிருந்த அரசு அலுவகங்களுக்குள் நுழைந்து சூறையாட முயன்றனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட கால்பந்து ரசிகர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இச் சம்பவத்தில்யாருக்கும் காயமில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.