மூப்பனார் தலைவராகனும்... சுவாமி வேண்டுகிறார்
திண்டுக்கல்:
வரும் டிசம்பர் மாதத்திற்குள் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டுவிடும் என்று ஜனாதா கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமிகூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பயணியர் விடுதியில் சுப்பிரமணிய சுவாமி நிருபர்களை சந்தித்தார். சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைகள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் மாதிரியே இருக்கிறது.
கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் பகையை உருவாக்க , பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை வைத்து வீரப்பன் திட்டம் தீட்டுகிறான். இந்த நோக்கத்தில்தான் நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. வீரப்பனின் கூட்டாளிகள் எண்ணிக்கை முன்பு குறைந்து இருந்தது. இப்பொழுது கூடியிருப்பதாக டெல்லியில்ஒரு அதிகாரி பேட்டியளித்துள்ளார்.
நான் மத்திய மந்திரியாக இருந்தபொழுது, ஒரு மந்திரியின் மகளை கடத்தி 5 பேரை விடுதலை செய்ய தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். அதற்கு நாங்கள்இடம் கொடுக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு பயப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஆட்சியை நடத்தத் தெரியவில்லை. ஊழல் செய்யத்தான் தெரியும். இதற்காக மூன்றாவது அணிஉருவாக்க பாடுபட்டு வருகிறேன். இந்த அரசியல் கூட்டணி பணியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவேன்.
மூன்றாவது அணிக்கு மூப்பனார் தலைமை தாங்க வேண்டும். பா.ஜ.க ஆட்சியை கவிழ்க்க உதவிய மூப்பனாருக்கு எந்தவித லாபமும் இல்லை. அரசியல்ரீதியாக இது பெரும் இழப்புத்தான். இதற்கு உதவியாக மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும்.
இதற்கான அனைத்து வேலைகளும் நடந்துவருகின்றன. வரும் அக்டோபர் 30 -ம் தேதி பாராளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்சிலை திறக்க இருக்கிறோம். நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களில் அவரும் ஒருவர். நான் ஜெயலலிதாவுக்கு இரு முறை பெரிய உதவிகளைச்செய்திருக்கிறேன். அதை அவர் மறந்துவிட்டார்.
இவ்வாறு டாக்டர் சுப்பிரமணியசாமி கூறினார்.