அபாண்டம் கூறலாமா மூப்பனார் .. கருணாநிதி வேதனை
சென்னை:
அ.தி.முக - த.மா.கா. கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க தி.மு.க. முயற்சி செய்கிறது என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு மூப்பனார் பழிகூறுவது வேதனை அளிக்கிறது என்று தி.மு..க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
சிறைகளை நிரப்பும் போராட்டம் ஒன்றை த.மா.கா. அறிவித்துள்ளது. தாராளமாக நிரப்பட்டும். அதற்காக தமிழக அரசும் சட்டப்படி உதவி செய்துஒத்துழைக்கத் தயாராகத் தான் இருக்கிறது. ஆனால், இவர்கள் சிறையை நிரப்பப்போவதற்கு முன்பு தேவையில்லாததும், உண்மை ஒரு துளியும்இல்லாததுமான ஒரு பழியை தி.மு..க மீது போடுகிறார்கள்.
சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அறிவிப்பு கொடுத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த மூப்பனாரிடம், "மதச்சார்பற்ற கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கதி.மு.க. முயற்சி செய்கிறது என்று கம்யூனிஸ்ட்கள் கூறியிருக்கிறார்களே? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஆளுங்கட்சி குலைப்பது இயற்கையாக நடப்பது தான். தமிழகத்திலும் அந்த முயற்சியை ஆளும்கட்சிமேற்கொண்டு வருகிறது என்று பதிலளித்துள்ளார்.
காங்கிரசார் ஆளுங்கட்சியாக இருந்த போது 1952-ல் நடந்ததை, அதாவது உழைப்பாளர் கட்சியையும் காமன் வீல் கட்சியையும் உடைத்தார்களே அதைமனதில் வைத்துக் கொண்டு மூப்பனார் இப்படி சொல்லியிருப்பாரேயானால் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஆனால், ஆட்டுக்குட்டியின் மீது ஓநாய் வீண்பழி போட்டதுபோல் இன்றைய மதச்சார்பற்ற (?) கூட்டணியை தி.மு..க உடைக்கிறது என்றுகம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு பழி கூறுவது தான் வேதனையாக இருக்கிறது.
சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் "கூட்டணி ஆட்சி கிடையாது. தனித்துத்தான் ஆட்சி. பலமுள்ள தலைமையைத் தான் மக்கள்விரும்புகிறார்கள் என்று மூப்பனாரை மேடையில் வைத்துக் கொண்டே ஜெயலலிதா இடியென முழங்கினாரே, அந்த பேச்சு தி.மு.க. எழுதிக்கொடுத்ததா?
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட பிரச்னையில் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் ராஜினாமா செய்யக் கோரி ஜெயலலிதா அறிக்கை விடுத்ததைசிறுபிள்ளைத்தனம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கண்டித்தார். அதற்கு இளங்கோவனை அரைவேக்காடு என்று அவர் அன்னையைவிட்டே அறிக்கை விடச் செய்தார்களே; அதெல்லாம்
தி.மு..க. வின் திருவிளையாடல்களா என்று மூப்பனாரை பார்த்துக் கேட்கத் தான் தோன்றுகிறது. அதனால் பயன் என்ன? என்ன பதில் கிடைத்து விடப்போகிறது?
இந்த லட்சணத்தில் மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையை தி.மு.க. குலைத்ததாம். வெள்ளாட்டுக்குட்டியின் மீது ஓநாய் வீண் பழி போட்ட கதையாகஇருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.