உயர் நீதிமன்றத்தில் தமிழில் விசாரணை நடத்த வேண்டும்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள், தகவல் பரிமாற்றங்களை தமிழ் மொழியில் நடத்த தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் தமிழில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.உயர்நீதிமன்ற வக்கீல்கள் தமிழ் மன்ற செயலாளராக இருக்கும் இவரது மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே நீதிமன்ற மொழியாக இருந்து வந்தது. கடந்த 1976ம் ஆண்டு தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுப்படி மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், தீர்ப்பாயம்(டிரிபுயூனல்) ஆகியவைகளில் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக நடைறைப்படுத்தப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் மக்கள் மொழியில் இருந்தால் தான் வழக்கு நடத்த நீதிமன்றத்துக்கு வரும் மக்கள்,வழக்கு விவரங்களை புரிந்து கொள்ள முடியும். மக்களுக்கு தெரிந்த மொழியில் சட்டம் இயற்றுதல், நிர்வாகம் செய்தல், கல்விகற்பித்தல், நீதி நிர்வாகம் செய்தல் ஆகியவை மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படை கோட்பாடு.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆங்கிலம் அல்லாமல் அந்தந்த நாட்டு மொழியில் தான் அரசின் அனைத்துநடவடிக்கைகளும் இருந்து வருகின்றன. பிரான்ஸ், கொரியா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, சீனா மற்றும் அரபு நாடுகளில் மக்கள்மொழியில் தான் நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 348(1)ன்படி, உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் நடைபெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348(2)ல் ஒரு மாநிலத்தின் கவர்னர், ஜனாதிபதியின் முன்அனுமதி பெற்று அம்மாநில மொழியை உயர் நீதிமன்றத்தில் அமல்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் முடிவடைந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை நடைறைப்படுத்துவதற்குதமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் இந்தி மொழியை பயன்படுத்தஉத்தரவிடப்பட்டு, அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்தியில் தான் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
அதேபோல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் இந்தி மொழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழியை அமல்படுத்துவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரியுள்ளார்.