தசரா விழாவால் மைசூரில் பந்த் இல்லை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிப்பதை வலியுறுத்தி வரும் 28 ம் தேதி பந்த் நடத்த, நடிகர் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதே நாள் தசரா விழா தொடங்கவிருப்பதால் மைசூருக்கு மட்டும் முழுஅடைப்பு நடத்துவதிலிருந்து விலக்கு அளிப்பது என்று ராஜ்குமார் ரசிகர் சங்கம்அறிவித்துள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் மூன்று பேரையும் மீட்பதற்காக கர்நாடக, தமிழக அரசுகள் அனைத்துமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
ஆயினும், நடிகர் ராஜ்குமார் மீட்பு காலதாமதமாகிக் கொண்டே வருவதால் ராஜ்குமார் குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் கவலைஅடைந்துள்ளனர். அவர்கள் கர்நாடகம் முழுவதும் வரும் 28 ம் தேதி முழு அடைப்பு நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மைசூரில் மவுன ஊர்வலம் நடத்தவுள்ளதாக சினிமா துறையினர் அறிவித்துள்ளனர். இதில் நடிகர் ராஜ்குமாரின் மகன்கள்சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்த் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மைசூரில்திங்கள் கிழமை ஊர்வலம் நடத்துவது, தசரா தினத்தன்று மைசூரில் பந்த் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் சாரா கோவிந்த் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 28 ம் தேதி மைசூரில் தசரா விழா தொடங்குகிறது. அன்றுசாமுண்டிதேவிக்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. எனவே 28 ம் தேதி மைசூரில் மட்டும் பந்த் நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.